உலகக் கிண்ணத்தில் அமெரிக்கா மோசடி செய்வதாக ஈரான் குற்றச்சாட்டு!

09.07.2026 07:42:35

ஃபிஃபா உலகக் கிண்ணம் தொடரை நடத்தும் விவகாரத்தில், அமெரிக்காவை ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியன் கடுமையாகச் சாடியுள்ளார். போட்டித் தொடரின் நாக்-அவுட் சுற்று புதிய சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், அமெரிக்கா விதிமுறைகளை வளைத்தல், எதிரணிகளை மிரட்டுதல், மற்றும் ஏமாற்றுதல் ஆகியவற்றில் ஈடுபடுவதாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளது. சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ள ஈரான் ஜனாதிபதி, உலகக் கிண்ணம் தொடரை நடத்தும் நாடாக அமெரிக்க அரசாங்கம் நடந்து கொள்ளும் விதம், அதன் வழக்கமான வெளிவிவகாரக் கொள்கையையே பிரதிபலிக்கிறது.

    

 

விதிகளை வளைத்தல், போட்டியாளர்களை மிரட்டுதல், தடைகளை உருவாக்குதல் மற்றும் ஏமாற்றுதல் ஆகியவை இதில் அடங்கும். இப்படியான ஆட்டங்களை ஈரான் புறந்தள்ளும். எங்கள் உரிமைகளுக்காக நாங்கள் உறுதியாக நிற்கிறோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நடப்புச் சேம்பியனான அர்ஜென்டினாவிடம் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் எகிப்து அணி 3-2 என்ற கோல் கணக்கில் பரபரப்பான முறையில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து ஈரான் இந்தக் கருத்துகளை பதிவு செய்துள்ளது.

மட்டுமின்றி, எகிப்து அணி இரண்டு கோல்கள் முன்னிலைப் பெற்ற நிலையில், அர்ஜென்டினா மற்றும் அதன் அணித்தலைவர் லியோனல் மெஸ்ஸிக்கு ஃபிஃபா நிர்வாகம் சாதகமாக நடந்துகொண்டதாக எகிப்து தலைமைப் பயிற்சியாளர் ஹொசாம் ஹசன் குற்றம் சாட்டியுள்ளார்.

ஆட்டத்தின் இரண்டாம் பாதியில் எகிப்தின் முஸ்தபா ஜிகோ அடித்த கோல், களத்தில் செய்யப்பட்ட VAR மறுஆய்வைத் தொடர்ந்து நிராகரிக்கப்பட்டதும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

அந்த முடிவு போட்டியின் மிகவும் பேசப்பட்ட தருணங்களில் ஒன்றாக அமைந்துள்ளது. மட்டுமின்றி, ஒருகட்டத்தில் ஹொசாம் ஹசனின் செய்கை ஒன்று இனவெறிக்கு எதிரான செயல் எனவும் விவாதிக்கப்பட்டது.

அந்தச் செய்கை உறுதிப்படுத்தப்பட்டால், அது ஒரு போட்டியை இடைநிறுத்துவதற்கோ அல்லது முழுமையாக ரத்து செய்வதற்கோ வழிவகுக்கக்கூடும்.

மேலும், அமெரிக்க முன்கள வீரர் ஃபோலரின் பலோகுனுக்கு எதிரான ஒரு போட்டித் தடை என்பது டொனால்ட் ட்ரம்பின் தலையீட்டால் ரத்து செய்யப்பட்டதும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.

ஈரானைப் பொறுத்தமட்டில் பிரிவு ஆட்டங்களில் மூன்றும் வெற்றி தோல்வி இன்றி சமனில் முடிந்ததை அடுத்து, வெளியேறும் நிலை ஏற்பட்டது.