கஷோகி கொலை குறித்து சவுதி இளவரசரிடம் கேள்வி - பைடன்

16.07.2022 11:00:00

சவுதி இளவரசர் முகமது பின் சல்மானுடனான சந்திப்பின் போது, ஊடகவியலாளர் ஜமால் கஷோகியின் கொலை குறித்து தான் எழுப்பியதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

சவுதி அரேபியாவுடனான உறவுகளை மீண்டும் கட்டியெழுப்ப அங்கு சென்றுள்ள ஜோ பைடன், 2018ஆம் ஆண்டு நடந்த கொலை தனக்கும் அமெரிக்காவிற்கும் மிகவும் முக்கியமானது என்பதை தெளிவுபடுத்தியதாக கூறியுள்ளார்.

ஜெட்டாவில் உள்ள அரச அரண்மனையில் மூன்று மணிநேரம் இடம்பெற்ற இச்சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பைடன், ‘இந்த கேள்வியை நான் நேரடியாக கேட்டேன். ஆனால், இந்த கொலைக்கு தனிப்பட்ட முறையில் பொறுப்பல்ல என்று அவர் என கூறினார்.

ஆனால், இரு நாடுகளும் மற்ற விஷயங்களில் ஒப்பந்தங்களை எட்டியதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

மேலும், இந்த சந்திப்பின் போது, அமெரிக்க அமைதி காக்கும் படையினர் இந்த ஆண்டு இறுதிக்குள் செங்கடல் தீவான தீரானை விட்டு வெளியேறுவார்கள் என்றும் உறுதியளித்தார்.

துருக்கியின் இஸ்தான்புல்லில் உள்ள சவுதி துணைத் தூதரகத்தில் 2018ஆம் ஆண்டு ணக்டோபரில் அமெரிக்காவை தளமாகக் கொண்ட சவுதி ஊடகவியலாளர் கஷோகி கொல்லப்பட்டார். இந்த கொலைக்கு பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் ஒப்புதல் அளித்ததாக அமெரிக்க புலனாய்வு அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன. ஆனால், இந்த குற்றச்சாட்டுகளை இளவரசர் மறுத்துள்ளார்.