தாயின் சடலத்தை ஓராண்டாக மறைத்த மகன்

11.09.2021 15:49:03

ஆஸ்திரியாவில் தாயின் சடலத்தை ஓராண்டாக மறைத்து, அவர் உயிருடன் இருப்பது போல் நாடகமாடி, மகன் ஓய்வூதியம் பெற்று வந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆஸ்திரியா நாட்டின் மேற்கு டைரோல் பகுதியில் வசித்து வந்த 89 வயதான மூதாட்டி, கடந்த ஆண்டு ஜூன் மாதம் இயற்கையாக மரணம் அடைந்தார். ஆனால், 66 வயதான அவரது மகன், தாயின் உடலை நல்லடக்கம் செய்யவில்லை. மாறாக தனது வீட்டின் பாதாள அறையில் ஓராண்டுக்கு மேலாக தாயின் உடலை ஐஸ்கட்டிகள் மற்றும் பேண்டேஜ்களை வைத்து பாதுகாத்து, துர்நாற்றம் வராமல் தடுத்துள்ளார். மேலும் கடந்த ஓராண்டு காலத்தில் தாயின் ஓய்வூதியத்தொகையாக 50 ஆயிரம் டாலருக்கு (சுமார் ரூ.36 லட்சம்) மேற்பட்ட தொகையை பெற்றுள்ளார்.

புதிதாக அந்தப் பகுதியில் வேலையில் சேர்ந்த தபால்காரர், 'ஓய்வூதியம் பெறும் அந்த மூதாட்டியை நேரில் பார்க்க வேண்டும்' என, கூறியபோது, அவரது மகன் மறுத்து விட்டார். இதுகுறித்து புகார் அளிக்கப்பட்டது. விசாரணையில், இறந்து போன தாயின் உடலை பாதாள அறையில் வைத்துவிட்டு, அவரது ஓய்வூதியத்தை மகன் வாங்கி வந்தது அம்பலமானது. இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து அவரிடம் விசாரணை நடத்துகிறார்கள்.