சுயாதீனப் பொறிமுறைகளுடனான சந்திப்பில் அரசாங்கத் தலையீடு!

29.06.2025 08:18:25

காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் உள்ளிட்ட உள்ளகக் கட்டமைப்புக்கள் உண்மையிலேயே சுயாதீனமானவை எனின், அவை வெளிவிவகார அமைச்சின் தலையீடு இன்றி உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க்கை தனியாகச் சந்திப்பதற்கு இடமளிக்கப்பட்டிருக்க வேண்டும் அல்லவா? என சர்வதேச மன்னிப்புச்சபையின் தெற்காசியப்பிராந்திய ஆய்வாளர் த்யாகி ருவன்பத்திரண கேள்வி எழுப்பியுள்ளார்.

உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு கடந்த திங்கட்கிழமை நாட்டுக்கு வருகைதந்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் கடந்த செவ்வாய்க்கிழமை (24) நீதியமைச்சு, காணாமல்போனோர் பற்றிய அலுவலகம், இழப்பீட்டுக்கான அலுவலகம், தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அலுவலகம் ஆகியவற்றின் அதிகாரிகளை வெளிவிவகார அமைச்சில் சந்தித்து பொறுப்புக்கூறலுக்கான உள்ளகப்பொறிமுறை மற்றும் நல்லிணக்க செயன்முறை குறித்து விரிவாகக் கலந்துரையாடினார்.

இச்சந்திப்பு தொடர்பில் தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் பதிவொன்றைச் செய்திருக்கும் சர்வதேச மன்னிப்புச்சபையின் தெற்காசியப்பிராந்திய ஆய்வாளர் த்யாகி ருவன்பத்திரண, காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் உள்ளிட்ட உள்ளகக் கட்டமைப்புக்கள் உண்மையிலேயே சுயாதீனமானவை எனின், அவை வெளிவிவகார அமைச்சின் தலையீடு இன்றி உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க்கை தனியாகச் சந்திப்பதற்கு இடமளிக்கப்பட்டிருக்க வேண்டும் அல்லவா? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

மாறாக வெளிவிவகார அமைச்சு அல்லது நீதியமைச்சு உள்ளடங்களாக அரசாங்கத்தின் பிரதிநிதிகளின் பங்கேற்புடன் நிகழக்கூடிய சந்திப்பில் தமது கட்டமைப்புக்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் ஆதரவு குறித்தோ அல்லது போதியளவு ஆதரவு வழங்கப்படாமை குறித்தோ காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் உள்ளிட்ட கட்டமைப்புக்களின் அதிகாரிகளால் எவ்வாறு பிரஸ்தாபிக்கமுடியும்? என்றும் த்யாகி ருவன்பத்திரண விசனம் வெளியிட்டுள்ளார்.