லைக்கா கோவை கிங்ஸ் அபார வெற்றி !

24.07.2021 10:38:51

தமிழ்நாடு பிரீமியர் லீக் ரி-20 தொடரின் ஐந்தாவது லீக் போட்டியில், லைக்கா கோவை கிங்ஸ் அணி, 8 விக்கெட்டுகளால் அபார வெற்றிபெற்றுள்ளது.

இந்த வெற்றியின் மூலம் நடப்பு தொடரில் முதல் வெற்றியை பதிவுசெய்த லைக்கா அணி, புள்ளி பட்டியலில் 3 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.

சென்னை- சிதம்பரம் மைதானத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், லைக்கா கோவை கிங்ஸ் அணியும் ரூபி திருச்சி அணியும் பலப்பரீட்சை நடத்தின.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ரூபி திருச்சி அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய ரூபி திருச்சி அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 171 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, நிதிஷ் ராஜகோபால் 45 ஓட்டங்களையும் அமித் சாத்விக் 42 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

லைக்கா கோவை கிங்ஸ் அணியின் பந்துவீச்சில், அபிஷேக் டன்வர், விக்னேஷ் மற்றும் செல்வ குமாரன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் அஜித் ராம் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 172 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய லைக்கா கோவை கிங்ஸ் அணி, 18.1 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதனால் லைக்கா அணி 8 விக்கெட்டுகளால் அபார வெற்றிபெற்றது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக கங்கா ஸ்ரீதர் ராஜூ 74 ஓட்டங்களையும் சாய் சுதர்சன் ஆட்டமிழக்காது 57 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

ரூபி திருச்சி அணியின் பந்துவீச்சில், சுனில் சேம் மற்றும் ராஹில் ஷா ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக 52 பந்துகளில் 4 சிக்ஸர்கள் 6 பவுண்ரிகள் அடங்களாக 74 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட கங்கா ஸ்ரீதர் ராஜூ தெரிவுசெய்யப்பட்டார்.