
மத்தியஸ்தம் செய்யத் தயார்.
ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே நிலவி வரும் மோதல் நிலை நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், குறித்த இரு நாடுகளுக்கும் இடையே மத்தியஸ்தம் செய்துவைக்கத் தயாராக இருப்பதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக ரஷ்ய ஜனாதிபதி மாளிகையான கிரெம்ளின் வெளியிட்டுள்ள அறிக்கையில் ”ஐக்கிய அரபு அமீரகத்தின் ஆட்சியாளர் முகமது பின் ஸாயத் அல் நஹ்யானுடன் புடின் தொலைபேசி வாயிலாக உரையாடினார் எனவும், இதன்போது ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் நடைபெற்றுவரும் மோதலை விரைவில் முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது” எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் ஈரான் அணுசக்தி திட்டங்கள் குறித்த சர்ச்சைக்குரிய பிரச்னைகளுக்குத் தீா்வு காண்பதற்கான அரசியல் மற்றும் தூதரக முயற்சிகளை தீவிரப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் இதன் போது புடின் வலியுறுத்தினார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த உரையாடலின்போது, ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான பரஸ்பர தாக்குதல்களை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக இரு தரப்பினருக்கும் இடையே மத்தியஸ்தம் செய்துவைக்க தான் தயாராக இருப்பதாக புடின் தெரிவித்துள்ளார் எனவும், இது தொடா்பாக ஏராளமான வெளிநாட்டுத் தலைவா்களுடன் தான் பேசிவருவதாக அல் நஹ்யானிடம் புடின் எடுத்துரைத்துள்ளார்” எனவும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.