இரவோடு இரவாக அநுராதபுரத்திற்கு அள்ளிச் செல்லப்பட்ட ஆவணங்கள்- சிங்கள குடியேற்றங்களை மேற்கொள்ளவா?
காணி சீர்திருத்த ஆணைக்குழுவிற்கு சொந்தமான ஆவணங்கள் வடமாகாண அலுவலகத்திலிருந்து இரவோடு இரவாக அனுராதபுரத்துக்கு மாற்றப்பட்டமை கவலைக்குரிய விடயம் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
அண்மைக் காலங்களில் சர்ச்சைக்குரிய விஷயமாக இடம்பெற்றுக் கொண்டிருக்கும் காணி சீர்திருத்த ஆணைக்குழுவிற்கு சொந்தமான ஆவணங்கள் வடமாகாண அலுவலகத்திலிருந்து இரவோடு இரவாக அனுராதபுரத்துக்கு மாற்றப்பட்டமை கவலைக்குரிய விடயம் எனத் தெரிவித்துள்ளார்.
அண்மையில் இடம்பெற்ற மின்சாரத்தடை சந்தர்ப்பத்தை பயன்படுத்தி இரவோடு இரவாக அனைத்து ஆவணங்களையும் அனுராதபுரத்துக்கு கொண்டு சென்றமையினால் எமக்கு பல சந்தேகங்கள் எழுகின்றது.
மேலும் கிளிநொச்சி மாவட்டத்தில் குறிப்பாக பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மூவாயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் காணிகளில் சிங்கள குடியேற்றங்களை மேற்கொள்வதற்காக இவ் இடமாற்றம் இடம்பெற்றிருக்கலாம் எனவும் சந்தேகங்கள் எழுகின்றன எனவும் தெரிவித்துள்ளார்.