
கெஹெலியவின் சொத்துக்கள் முடக்கம் நீடிப்பு!
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் மனைவி மற்றும் குடும்ப உறுப்பினர்களின் வங்கிக் கணக்குகள், ஆயுள் காப்புறுதி திட்டங்கள் ஆகியவற்றை செயற்படுத்துவதை தடுக்கும் உத்தரவை மேலும் 3 மாதங்களுக்கு நீடித்துக் கொழும்பு மேல்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. |
கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு அமைய, கெஹெலிய ரம்புக்வெல்லவின் மனைவி, மகள்கள் மற்றும் உறவினர்களின் 97 மில்லியன் ரூபாயுக்கும் அதிக பெறுமதியான நிலையான வங்கி வைப்புக்கள் மற்றும் ஆயுள் காப்புறுதி திட்டங்கள் என்பவற்றை செயற்படுத்துவதற்கு தடை விதித்து கொழும்பு மேல்நீதிமன்றம் முன்னதாக உத்தரவு பிறப்பித்திருந்தது. இதன்படி, குறித்த உத்தரவு இன்றுடன் நிறைவடையும் நிலையில், அதனை மேலும் நீடிக்குமாறு ஆணைக்குழு கோரிக்கை விடுத்துள்ளது. இந்த கோரிக்கையை பரிசீலித்த கொழும்பு மேல்நீதிமன்றம் இந்த உத்தரவை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 02ஆம் திகதி வரை நீடிக்குமாறு உத்தரவிட்டுள்ளது. |