
வெளியீட்டிற்குக் காத்திருக்கும் 100 படங்கள்
தமிழகத்தில் நாளை (ஆக.,23) முதல் தியேட்டர்களை மீண்டும் திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது. சுகாதார கட்டுப்பாடுகளுடன், 50 சதவீத இருக்கைகள், பணியாளர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தியிருத்தல் உள்ளிட்டவை கடைபிடிக்கப்பட வேண்டும் என்றும் அரசு உத்தரவிட்டுள்ளது.
நாளை திங்கள் முதல் தியேட்டர்களைத் திறந்து கொள்ள அனுமதி என்பது நேற்று (சனிக்கிழமை) மாலைதான் அறிவிக்கப்பட்டது. இன்று ஒரே நாளில் அனைத்துத் தியேட்டர்களையும் சுத்தப்படுத்தி திறப்பார்களா என்பது சந்தேகம்தான். கொஞ்சம் கொஞ்சமாகத்தான் தியேட்டர்கள் திறக்கப்படும். மேலும், நாளை முதல் தியேட்டர்களில் திரையிட எந்த புது தமிழ்ப் படங்களும் அவர்கள் கைவசம் இல்லை. வெள்ளிக்கிழமைகளில் மட்டும்தான் புதிய படங்களை அதிகமாக வெளியிடுவார்கள். அந்த விதத்தில் வரும் வெள்ளி ஆகஸ்ட் 27ம் தேதியன்று சில புதிய படங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நேற்று தியேட்டர்கள் திறப்பு பற்றிய அறிவிப்பு வந்ததுமே 'பிளான் பண்ணி பண்ணணும்' படக்குழுவினர் 'பிளான் பண்ணி தியேட்டருக்கு வர நாங்க ரெடி, நீங்க ரெடியா' என போஸ்டரை வெளியிட்டனர். விஜய் ஆண்டனி நடிக்கும் 'கோடியில் ஒருவன்' படக்குழுவினர் விரைவில் திரையரங்குகளில் என்ற போஸ்டர் வெளியிட்டனர். விஜய் சேதுபதி, விஜய் ஆண்டனி, ஜிவி பிரகாஷ், சசிகுமார், அருண் விஜய் ஆகியோர் நடித்து இரண்டுக்கும் மேற்பட்ட படங்கள் முடிவடைந்து வெளியீட்டிற்குத் தயாராக உள்ளன.