இஸ்ரேல் வானத்தை ஏவுகணைகளால் மூடிய ஈரான்!

15.06.2025 08:09:22

சமீபத்திய சுற்று தீவிர தாக்குதலில், இஸ்ரேல் மீது 100க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை ஈரான் வீசியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எரியும் விண்கற்கள் போல ஈரானின் Kheibar Shekan ஏவுகணைகள் இஸ்ரேலின் வானத்தை மூடியதாகவே தகவல்கள் தெரிவிக்கின்றன. இரண்டாவது இரவு தாக்குதல்களில் ஈரான் முதலில் தாக்கியது, இஸ்ரேலின் குடியிருப்பு பகுதிகளில் வெடிப்புகள் பதிவாகியுள்ளன.

ஜோர்டானின் தலைநகரான அம்மானில் வான்வழித் தாக்குதல் சைரன்கள் ஒலிக்கப்பட்ட நிலையில், இஸ்ரேலின் ஹைஃபா மற்றும் டெல் அவிவ் ஆகிய நகரங்கள் இந்தமுறை ஈரானின் முக்கிய இலக்குகளாகக் கூறப்படுகின்றன.

இஸ்ரேலுக்கு எதிராக ஆபரேஷன் True Promise 3 ஐ முன்னெடுத்து வரும் ஈரான் சுமார் 100 ஏவுகணைகளை ஒரேநேரத்தில் ஏவியுள்ளது. ஈரானிய ஏவுகணைகளை தடுக்கும் முயற்சிகளுக்கு நடுவே தெஹ்ரான் மீது இஸ்ரேல் வான் தாக்குதலை முன்னெடுத்துள்ளது.

இஸ்ரேலிய விமானங்கள் தெஹ்ரானில் பாதுகாப்பு அமைச்சகம், அணுசக்தி தலைமையகம், அணுசக்தி ஆய்வகங்கள் மற்றும் எண்ணெய் வசதிகள் என நான்கு இலக்குகளைத் தாக்கின.

வெளியான தகவலின் அடிப்படையில் ஷாஹ்ரான் எண்ணெய் கிடங்கு தீப்பிடித்து எரிகிறது. இந்த நிலையில், தெஹ்ரான் பற்றியெரிகிறது என இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர், இஸ்ரேல் காட்ஸ் சமூக ஊடக பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இஸ்ரேலைப் பாதுகாக்க அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் நாடுகள் முன்வந்தால், அவர்களின் இராணுவத் தளங்களைத் தாக்கப் போவதாக ஈரான் மிரட்டல் விடுத்ததன் பின்னரே இஸ்ரேல் மீது மீண்டும் தாக்குதல் தொடுத்துள்ளது.

உலகெங்கிலும் உள்ள இஸ்ரேலின் நட்பு நாடுகள், இரு எதிரி சக்திகளுக்கிடையேயான முந்தைய மோதல்களின் போது ஈரானில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணைகளை இஸ்ரேல் சுட்டு வீழ்த்துவதற்கு கடந்த காலங்களில் உதவின.

ஆனால் தற்போது இஸ்ரேலுக்கு ஏதேனும் உதவிகள் வழங்கினால், மத்திய கிழக்கில் அமைந்துள்ள இராணுவத் தளங்கள் மற்றும் கப்பல்களை குறிவைப்போம் என்று ஈரான் எச்சரித்தது.

அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் ஆதரவுடன் அணு ஆயுதங்களைக் குவித்து வைத்துள்ள இஸ்ரேல், அணு ஆயுதம் தயாரிக்க முயற்சிப்பதாக குற்றஞ்சாட்டி ஈரான் மீது தாக்குதல் தொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.