மாவீரர் வாரம் புலம்பெயர் அமைப்புக்களின் அறிவிப்பால் சர்ச்சை!

25.11.2022 09:46:52

முல்லைத்தீவு மாவட்டத்தின் வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் வாரத்தின் ஐந்தாம் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று காலை உணவு பூர்வமாக கடைப்பிடிக்கப்பட்டன.

தாயக விடுதலைக்காக தங்களது இன்னுயிர்களை ஆகுதியாக்கிக் கொண்ட மாவீரர்களை நினைவுகூர்ந்து வருடம்தோறும் நவம்பர் 27 ஆம் திகதி மாவீரர் நாள் நினைவேந்தப்பட்டு வருகிறது. 

அத்தோடு நவம்பர் மாதம் 21 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை மாவீரர் வாரமாக ஆண்டு தோறும் கடைபிடிக்கப்பட்டும் வருகின்றது. 

மாவீரர் வாரம்

அந்த வகையில் தமிழர் தாயகத்திலும் புலம்பெயர்ந்து தமிழர்கள் வாழ்கின்ற அனைத்து நாடுகளிலும் நவம்பர் 21 முதல் மாவீரர் வாரம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. 

அவ்வாறான நிலையில், முல்லைத்தீவு மாவட்டத்தின் வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்திலும் கடந்த 21 ஆம் திகதி முதல் மாவீரர் வாரம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. 

மாவீரர் வாரத்தின் ஐந்தாம் நாளாகிய இன்று காலை மாவீரர்களுக்கு சுடரேற்றி மலர் மாலை அணிவித்து அகவணக்கம் செலுத்தி அஞ்சலி இடம் பெற்றது. 

அத்தோடு நவம்பர் 27ஆம் தேதி மாவீரர் நாளுக்கான நினைவேந்தல் நிகழ்விற்கான அனைத்து ஏற்பாடுகளும் துயிலுமில்லத்திலே மிகவும் சிறப்பாக மாவீரர்களின்  பெற்றோர் உறவுகள் இணைந்து முன்னெடுத்து வருகின்றனர். 

துயிலும் இல்லங்களைப் பொறுப்பேற்கும் புலம்பெயர் அமைப்புக்கள்

துயிலுமில்ல வளாகம் சிரமதானம் செய்யப்பட்டு தற்போது அலங்கார வேலைகளில் மக்கள் ஈடுபட்டு வருகின்றனர். 

இதேவேளையிலே புலம்பெயர் தேசத்தில் இருக்கும் சில அமைப்புகள், தங்களது தயகத்தில் இருக்கும் துயிலும் இல்லங்களை, புலம் பெயர் தேசத்திலிருக்கும் வேறு சில அமைப்புக்கள் பொறுப்பேற்று இருப்பதாக அறிவித்த கருத்து தொடர்பில் தமது கடும் கண்டனத்தையும் வெளியிட்டுள்ளனர். 

அண்மையில் லண்டனில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் முல்லை தீவு மாவட்டத்தின் பல்வேறு துயிலுள்ளங்களை தாங்கள் பொறுப்பெடுத்து இருப்பதாக ஒரு அமைப்பால் கருத்து முன்வைக்கப்பட்ட நிலையில் அது தொடர்பில் வன்னி விளாங்குளம் மாவீரர் துயிலுமில்ல நிர்வாகத்தினர் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளனர். 

பொய்யான நிதிசேகரிப்பு

வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலும் இல்ல நினைவேந்தல் நிகழ்வானது தமது துயிலும் இல்ல மாவீரர்களுடைய பிள்ளைகள் மற்றும் உறவுகளுடைய நிதி பங்களிப்போடு மிகவும் சிறப்பாக நினைவேந்தல் நிகழ்வுகளை மேற்கொண்டுள்ளதாகவும், இதற்காக புலம்பெயர் அமைப்புகள் யாரும் நிதிகளை வழங்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே இவ்வாறு தாங்கள் பொறுப்பெடுத்திருப்பதாக தெரிவித்து பொய்யாக நிதி சேகரிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துமாறும் வன்னிவிளாங்குளம் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் தங்களது பணிக்குழுவுக்கு இதுவரை அவ்வாறான அமைப்புகளது நிதி உதவி கிடைக்கப்பெறவில்லை எனவும் அவ்வாறு எந்த அமைப்பும் தங்களை பொறுப்பெடுத்து தாங்கள் இயங்கவில்லை எனத் தெரிவித்துள்ளதோடு, இவ்வாறான கருத்துக்களை உடனடியாக நிறுத்துமாறும் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளனர்.