தமிழ் மாணவி அமெரிக்காவில் கைது

27.04.2024 05:00:00

நியூயார்க்: அமெரிக்காவின் நியூஜெர்சியில் உள்ள பிரின்ஸ்டன் பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவர்கள் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு கல்லூரி நிர்வாகம் சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. எனினும் இதனை பொருட்படுத்தாத பல்கலைக்கழகத்தின் மாணவர்கள், மாணவிகள் சுமார் 100 பேர் போராட்டத்தில் ஈடுபட்டனர். கல்லூரிகள் இஸ்ரேல் உடனாக உறவை முறித்துக்கொள்ள வேண்டும், காசா மீதான மோதலை செயல்படுத்தும் நிறுவனங்களில் இருந்து விலக வேண்டும் என்றும் வலியுறுத்தி இந்த போராட்டம் நடத்தப்பட்டது.

பல்கலைக்கழக நிர்வாகத்தின் எச்சரிக்கையையும் மீறி போராட்டம் நடத்தப்பட்ட நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய வம்சாவளியை சேர்ந்த அச்சிந்தியா சிவலிங்கன் என்ற மாணவி உட்பட இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர். அச்சிந்தியா கோயம்புத்தூரில் பிறந்த தமிழர். இருவரும் பல்கலைக்கழகத்துக்குள் நுழைவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.