பாலியல் குற்றவாளியுடன் நட்பு பாராட்டியது மிகப்பெரிய தவறு: பில் கேட்ஸ்
உலக பணக்காரர்கள் பட்டியலில் 4வது இடத்தில் இருப்பவர் பில் கேட்ஸ். கடந்த மே 3ம் தேதி பில் கேட்ஸ் - மெலிண்டா கேட்ஸ் தம்பதி விவாகரத்து செய்ய இருப்பதாக அறிவிப்பு வெளியானது. 27 ஆண்டு கால திருமண உறவு முடிவுக்கு வருவதாகவும், தொண்டு அறக்கட்டளையில் இருவரும் தொடர்ந்து இணைந்து செயல்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், அவர்களுக்கு நேற்று முன்தினம் வாஷிங்டன் மாகாண கிங் நகர நீதிமன்றம் சட்டப்படி விவாகரத்து வழங்கியது. பில் கேட்ஸ் - மெலிண்டா தம்பதியின் விவாகரத்துக்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. இதில் பாலியல் குற்றவாளியான ஜெப்ரி எப்ஸ்டீனுடன் பில் கேட்ஸ் நட்பு வைத்து இருப்பதும் ஒரு காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெப்ரி எப்ஸ்டீனை பில் கேட்ஸ் அடிக்கடி சந்தித்து வந்ததாக மெலிண்டா கருதினார் என்ற தகவல்கள் வெளியாகின.
இதுகுறித்து பில்கேட்ஸ் கூறுகையில், 'நான் ஜெப்ரி எப்ஸ்டீனுடன் நட்பு வைத்திருந்தது மிகப்பெரிய தவறு. அவருக்கு இருந்த தொடர்புகள் மூலம் தொண்டு நிறுவனத்துக்கு நிதி கிடைக்கும் என்று நம்பி அவரை சந்தித்தேன். அது நிறைவேறாது எனத் தெரியவந்த போது ஜெப்ரி எப்ஸ்டீனுடன் இருந்த நட்பு முடிவுக்கு வந்தது. மெலிண்டாவுடன் விவாகரத்து ஆனது நிச்சயமாக ஒரு சோகமான மைல்கல். அறக்கட்டளையில் நாங்கள் இருவரும் தொடர்ந்து பணியாற்றுவோம்' என்றார்.
ஜெப்ரி எப்ஸ்டீன் கடந்த 2019ம் ஆண்டு சிறையில் தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.