ஜன நாயகன் படத்துக்கு அதிர்ச்சி.

12.03.2026 11:25:11

ஹெச்.வினோத் இயக்கத்தில் பிரபல நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படம் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருகின்றது.

அரசியலில் காலடி எடுத்து வைத்துள்ள விஜய்யின் இறுதித் திரைப்படம் இது என்பதால்,  ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில், தற்போது படத்தின் ஓடிடி உரிமம் தொடர்பில் அதிர்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது.

இந்த திரைப்படம் கடந்த ஜனவரி மாதம் 9ஆம் திகதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், தணிக்கைச் சான்றிதழ் பெறுவதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக வெளியீடு தாமதமானது.
கடந்த மார்ச் 9ஆம் திகதி நடைபெறவிருந்த மறுதணிக்கை, அதிகாரி ஒருவரின் சுகயீனம் காரணமாக எதிர்வரும் மார்ச் 17ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பின்னரே இந்த திரைப்படம் வெளியாகும் என செய்திகள் கசிந்து வருகின்றன.

இந்த நீண்ட தாமதம் காரணமாக,  சுமார் 120 கோடி ரூபாவிற்கு இந்த திரைப்படத்தின் ஓடிடி உரிமத்தைக் கொள்வனவு செய்திருந்த நிறுவனம்,  தற்போது அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், விஜய்யின் இந்த அரசியல் பின்னணி கொண்ட திரைப்படம் வெளியாவதில் நிலவும் இழுபறி திரை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.