
அனைத்து மதங்களுக்கிடையேயான ஒற்றுமை அவசியம்.
நாட்டில் நல்லிணக்கத்தையும், நீதியையும், சமத்துவத்தையும் நிலைநாட்டுவதற்கு, சகல மதங்களுக்கு இடையிலும் நல்லுறவையும் சகோதரத்துவத்தையும், அன்பையும் முன்னுதாரணமாகக் கொண்டிருப்பது மிகவும் அவசியமாகும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
வரலாற்றுச் சிறப்புமிக்க மாத்தறை எமது அன்னை ஆலயத்தின் 118-வது வருடாந்த பெருவிழாவில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நேற்று கலந்து கொண்ட போதே இந்த விடயத்தை தெரிவித்தார்.
இந்த வருடாந்த திருவிழாவில் கலந்துகொண்ட பிரதமருக்கு, பதுளை மறைமாவட்ட ஆயர் அதிவணக்கத்துக்குரிய ஜூட் நிஷாந்த சில்வா மற்றும் காலி மறைமாவட்ட ஆயர் அதிவணக்கத்துக்குரிய ரேமண்ட் விக்கிரமசிங்க ஆகியோரால் விசேட ஆசீர்வாத பூஜை நடத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து தேவாலயத்தின் பிரதான மண்டபத்தில் மாத்தறைப் பிரதேசத்தை சேர்ந்த அனைத்து மதத் தலைவர்களுக்கும் பிரதமருக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று நடைபெற்றது.
இதன் போது நீண்ட வரலாறு கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க இத்தேவாலயத்தின் வருடாந்த பெருவிழாவில் கலந்துகொள்ள கிடைத்தமை ஒரு பாக்கியம் எனத் தெரிவித்த பிரதமர், ஜனாதிபதி உட்பட அரசாங்கத்தின் சார்பில் திருவிழாவிற்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
இதன்போது மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர்,
இந்த தேவாலயத்திற்கும், நகரிலுள்ள ஏனைய மதஸ்தலங்களுக்கும் இடையில் நிலவும் சகோதரத்துவம் மற்றும் பிணைப்பின் மூலம் ஒற்றுமை, நீதி மற்றும் சமத்துவம் என்ற விழுமியங்களுக்காக வழங்கப்படும் பங்களிப்பு பாராட்டத்தக்கது.
மாத்தறை நகருக்கு மட்டுமல்லாது இந்த நாட்டுக்கே இது அவசியமானதாகும்.
இந்த முன்மாதிரி நமக்குத் மிகவும் தேவையானது. இந்த முன்மாதிரியை எமக்கு பெற்றுத்தரும் உங்கள் அனைவருக்கும் நான் நன்றியுள்ளவளாக இருக்கிறேன்.
அத்துடன், சமூகத்திற்காக நீங்கள் செய்யும் இந்த சேவைக்கும், சமூக நீதிக்காக நீங்கள் மேற்கொள்ளும் இந்த பங்களிப்புக்கும் மேலும் வலிமையும் தைரியமும் கிடைக்க வேண்டும் என நான் பிரார்த்திக்கிறேன் என்றும் கூறினார்.