குரங்கு அம்மை நோயை கண்டறிய நாடு முழுவதும் 15 பரிசோதனை ஆய்வகங்கள்

15.07.2022 11:15:27

உலகம் முழுவதும் இதுவரை 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை குரங்கு அம்மை தாக்கி உள்ளது. குறிப்பாக மேற்கு, மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் அதிகமாக பரவி வருகிறது. இந்தியாவில் முதல் முறையாக வெளிநாட்டில் இருந்து கேரளாவுக்கு திரும்பிய ஒருவருக்கு நேற்று குரங்கு அம்மை உறுதி ஆனது. இதையடுத்து, மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசு நேற்று அறிவுறுத்தியது.

இந்த நிலையில் குரங்கு அம்மை நோயை கண்டறியும் வகையில் மாதிரிகளை பரிசோதிக்க நாடு முழுவதும் 15 வைரஸ் ஆராய்ச்சி மற்றும் கண்டறியும் ஆய்வகங்கள் தயாராக உள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. இந்த ஆய்வகங்கள் புனேவில் உள்ள ஐசிஎம்ஆர்- தேசிய வைராலஜி நிறுவனம் மூலம் குரங்கு அம்மை நோயை கண்டறியும் சோதனையில் பயிற்சி பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.