கோமாளித்தனமான கருத்துக்களுக்கு என்னால் பதிலளிக்க முடியாது
யாழ்.மாநகர சபையின் புதிய முதல்வராக பதவியேற்றுள்ள சட்டத்தரணி வி.மணிவண்ணன் யாழ்.ஊடக அமையத்தில் இன்று ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டிருந்தார்.
குறித்த ஊடக சந்திப்பில் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
நல்லூர் பிரதேச சபையின் கடந்த அமர்வின் போது, மணிவண்ணனுடன் மது போதையில் வந்த காடையர் கூட்டம் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் பெண் உறுப்பினர்களுடன் அநாகரிகமாக நடந்து கொண்டதாக சட்டத்தரணி க.சுகாஸ் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளமை தொடர்பில் ஊடகவியலாளர்களால் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு முதல்வர் பதிலளிக்கையில், “கோமாளித்தனமான கருத்துக்களுக்கு தான் பதிலளிக்க விரும்பவில்லை எனவும், ஆக்கபூர்வமான விடயங்கள் தொடர்பில் விவாதிப்போம் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் “அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இருவர் மீது பாரதூரமான குற்றச் சாட்டுக்கள் உள்ளன. அதனால் அவர்கள் இருவரையும் எமது அணிக்குள் உள்வாங்கவில்லை எ னவம் தெரிவித்துள்ளார்.
அவர்களில், ஒருவர் மணல் கொள்ளையில் ஈடுபட்டதாக பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட நபர் மற்றையவர் மாநகர சபையில் வேலை பெற்றுத் தருவதாகக் கூறி பலரிடம் பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டவர் என எனக்கு வாய் மொழி மூல முறைப்பாடுகள் கிடைக்க பெற்றுள்ளன.
குறித்த நபர் மாநகர சபை பணத்தினை கையாடல் செய்யாமையால் என்னால் முதல்வர் எனும் ரீதியில் நடவடிக்கை எடுக்க முடியாது.
ஆனாலும் பாதிக்கப்பட்டவர்கள் சட்ட நடவடிக்கை எடுக்க தயாராக இருந்தால், சட்டத்தரணி எனும் ரீதியில் நிச்சயமாக அவர்களுக்கு நீதியை பெற்றுக் கொடுக்க தயாராக உள்ளேன் என தெரிவித்தார்.