ஜி.கே மணி மீது அன்புமணி பகீர் குற்றச்சாட்டு!
|
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறவுள்ளது. வாக்குப்பதிவுக்கு ஒரு வாரமே இருப்பதால் அரசியல் கட்சியினர் இறுதிகட்ட பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுகவும், ஆட்சியை பிடிப்பதற்கு அதிமுகவும் போராடி வருகிறார்கள். பாமகவில் ராமதாஸ் - அன்புமணி இடையே பனிப்போர் தொடர்ந்து வருகிறது. இதற்கு ஜி.கே மணி தான் காரணம் என்று அன்புமணி அவரை கடுமையாக விமர்சித்துள்ளார். தர்மபுரி பென்னாகரம் தொகுதியில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பிரச்சாரம் செய்தார். |
|
அப்போது அவர் பேசும்போது, "ஜி.கே மணி தான் பாமகவின் முதன்மை துரோகி. அவர்தான் என்னையும், என் அப்பாவையும் பிரித்துவிட்டார். ஆனால் அவரும் அவர் மகனும் நன்றாக இருக்க வேண்டும். இதற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முக்கிய காரணம். 100 சதவீதம் அவர் தான் காரணம். இதெல்லாம் பொழப்பா.. ஸ்டாலினால் நம் கட்சியை நேரடியாக தொட முடியாது. காரணம் பாமக நெருப்பு. அதனால் துரோகிகளை வைத்து சூழ்ச்சி செய்து, குழப்பம் உண்டாக்கி கட்சியில் பிளவு செய்ய முயற்சிக்கிறார். அவரின் முயற்சி எள்ளளவும் முடியாது. அவர்களின் முயற்சியால் குடும்பத்தில் வேண்டுமானால் குழப்பம் வந்திருக்கும். ஆனால் பாமக கட்சி முன்பைவிட இப்போதுதான் நாங்கள் பலமாக இருக்கிறோம். ஜி.கே மணியை பார்த்து கேட்கிறேன். எதுக்குய்யா உங்களுக்கு இந்த பொழப்பு. இதற்கு நீங்கள் எப்போதோ திமுகவில் இணைந்திருக்கலாமே. ஏன் இந்த குழப்பம். ஸ்டாலினின் அடிமை ஜி.கே மணி. உதயநிதியின் அடிமை தமிழ் குமரன். தமிழ் குமரன் டெல்லிக்கு செல்கிறாராம். காங்கிரஸில் சேர்கிறாராம். அரைமணி நேரத்தில் பென்னாகரம் தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படுகிறது. ஜி.கே மணி மீது காட்டம் இந்த பென்னாகரம் தொகுதிக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது. கை சின்னத்திற்கும், பென்னாகரத்திற்கும் என்ன தொடர்பு இருக்கிறது. கடைசியாக இந்த தர்மபுரி மாவட்டத்தில் காங்கிரஸ் எந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டனர். தர்மபுரி மாவட்டத்தில் 5 தொகுதிகள் உள்ளன. அங்கு அவர்கள் 25-30 ஆண்டுகளுக்கு முன்பு தான் போட்டியிட்டனர். இப்போது திடீரென காங்கிரஸ் இங்கு வளர்ந்துவிட்டதா. மொத்தமாக பென்னாகரத்தில் காங்கிரஸ் கட்சிக்கு 500 ஓட்டுகள் இருக்குமா. அவ்வளவு கூட இல்லையா. இவர் போன உடனே காங்கிரஸில் சீட் கிடைத்துவிட்டதாம். ஜி.கே மணி எல்லோருக்கும் போன் செய்து, வணக்கம்ங்க ஜி.கே மணி பேசறேன். நல்லாருக்கீங்களா. தமிழ்குமரன் வருவான். கொஞ்சம் பார்த்துக்கோங்க என்கிறார். தேர்தலில் அவர் தோற்பதை மொத்த நாடே பார்க்கும்" என்றார். |