ஆப்கானின் பட்டினியை போக்க 8,843 கோடி நன்கொடை

15.09.2021 15:54:56

ஆப்கான் மக்களின் வறுமை, பட்டினியை போக்க ரூ. 8,843 கோடியை உலக நாடுகள் ஐ.நா மூலம் வழங்க உள்ளது. அமெரிக்க படைகளை வெளியே விட்டதற்கு, அவர்கள் தங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும் என்று தலிபான் வெளியுறவு அமைச்சர் கூறியுள்ளார்.

கடந்த ஆக. 15ம் தேதி ஆப்கானிஸ்தான் அரசு நிர்வாகத்தை தலிபான்  தீவிரவாதிகள் கைப்பற்றியதால், அமெரிக்க பெடரல் ரிசர்வ், சர்வதேச நாணய  நிதியம் மற்றும் உலக வங்கி ஆகியவை அந்த நாட்டிற்கான நிதிஉதவியை  துண்டித்துவிட்டன. தற்காலிகமாக புதிய அமைச்சரவையை அறிவித்த தலிபான்கள்,  தங்களது சித்தாந்தங்களை மக்கள் மீது திணித்து வருகிறார்களே தவிர, மக்களின்  அடிப்படை பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் தரவில்லை. இதனால், ஒட்டுமொத்த நாடே  பெரும் ெபாருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது.

வறுமையும்,  பட்டினியும் வாட்டி வதைக்கிறது. இதுதொடர்பாக ஐ.நா. பொதுச் செயலாளர்  அன்டோனியோ குட்டரெஸ் கூறுகையில், ‘ஆப்கானிஸ்தான் மக்கள் ஒட்டுமொத்த  பொருளாதா சரிவை எதிர்கொண்டுள்ளனர். ஆப்கானில் வசிக்கும் பாதிக்கும் மேலான  மக்கள் அல்லது சுமார் 18 மில்லியன் மக்கள் ஒரு நாளைக்கு ஒரு டாலர் கூட  சம்பாதிக்க முடியாதவர்களாக உள்ளனர்.

மக்களுக்கான உணவு விநியோகம்  துண்டிக்கப்பட்டுள்ளது. ஐ.நா. கணக்கெடுக்கின்படி, 5 வயதிற்குட்பட்ட  ஆப்கானிய குழந்தைகளில் பாதிப்பேர் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டினால்  பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், ஆப்கானிஸ்தானின் புதிய தலிபான் அமைச்சரவையில் உள்ள வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முடாகி, ‘அமெரிக்கா படைகள் ஆப்கானை வெளியே அனுமதித்த தலிபான்களுக்கு அவர்கள் (அமெரிக்க நிர்வாகம்) எங்களை பாராட்ட வேண்டும்.

அமெரிக்கா ஒரு பெரிய நாடு; ஆப்கான் மக்களுக்கு உதவுவதற்காக அவர்களுக்கு பெரிய இதயம் (மனம்) வேண்டும். மனிதாபிமான அடிப்படையில் 1.2 பில்லியன் டாலர்கள் (இந்திய ரூபாயில் 8,843 கோடி) நன்கொடை நிதி வழங்கவுள்ளதாக ஐ.நா கூறியுள்ளது. அமெரிக்காவிலிருந்து சுமார் 64 மில்லியன் டாலர் (இந்திய ரூபாயில் 471 கோடி) நிதி வந்துள்ளது. அதற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

உலகம் நாடுகள் கொடுக்கும் அனைத்து உதவிகளையும் பெற தயாராக உள்ளோம். நாங்கள் அமெரிக்காவின் கடைசி நபர் பாதுகாப்பாக வெளியேறும் வரை உதவினோம். ஆனால் துரதிருஷ்டவசமாக, எங்களுக்கு நன்றி கூற வேண்டிய அமெரிக்கா, எங்களது சொத்துக்களை முடக்கி உள்ளது. நாட்டில் வறுமையைப் போக்கவும், ஊழல் இல்லாமல் முழு நிதியையும் பயன்படுத்த உள்ளோம்.

எங்களது ‘இஸ்லாமிய எமிரேட்’ அரசானது, உலக நாடுகள் அளிக்கும் உதவியை வெளிப்படையான முறையில் தேவைப்படும் மக்களுக்கு எங்களால் முடிந்த வரை வழங்குவோம்’ என்றார்.