ஊடகங்களை அடக்கி எமது போராட்டங்களை நசுக்கும் நோக்கமே சிறிலங்கா அரசின் புதிய சட்டம்!
சிறிலங்கா அரசாங்கம் கொண்டுவரவுள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டம், எமது போராட்டத்தினை நசுக்குவதற்காகவே என வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் குற்றச்சாட்டியுள்ளனர்.
வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி யோகராசா கனகரஞ்சினி கிளிநொச்சியில் ஏற்பாடு செய்திருந்த ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
“இந்த அரசாங்கம் தற்பொழுது இருக்கின்ற பயங்கரவாத தடுப்பு சட்டத்தினை நீக்கி பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் என்ற புதிய சட்டத்தை உருவாக்க முயல்கின்றது. இந்த புதிய சட்டத்தால் எங்களுடைய ஜனநாயக ரீதியான போராட்டம், நீதி கோருகின்ற பேரணிகள், ஆர்ப்பாட்டங்களில் எல்லாம் சுயாதீனமாக இயங்குகின்ற ஊடகங்கள் கூட எமது பிரச்சினைகளை அடையாளம் கண்டு வெளிக்கொண்டு வர முடியாத அளவிற்கு குறித்த சட்டம் அமையப்போவதாக நாங்கள் அறிகின்றோம்.
ஊடகங்களை கட்டுப்படுத்தும் நோக்கம்
வடக்கு கிழக்கிலே வாழுகின்ற ஒட்டுமொத்த தமிழர்களிற்கும் ஆபத்தான சட்டமாக தான் நாங்கள் பார்க்கின்றோம். இந்த சட்டத்தை வர்த்தமானி ஊடாக அரசாங்கம் கொண்டுவருவதற்கு முயன்றால் அதனை நாங்கள் எதிர்ப்போம். பாதிக்கப்பட்ட தாய்மாராகிய எமக்கு இதுவரை நீதி கிடைக்காத போதும், நாங்கள் சர்வதேசத்தின் ஊடாக நீதி வேண்டி நிற்கின்றோம்.
இலங்கை அரசினால் ஒருபோதும் எங்களிற்கான நீதி கிடைக்கப்போவதில்லை. ஒட்டுமொத்தமாக வட கிழக்கு தழிழர்களிற்கான சுய உரிமையும் கிடைக்கப்போவதில்லை. தமிழ் அரசியல்வாதிகளும், ஏனைய சிங்கள அரசியல்வாதிகளும் இந்த சட்டத்தை எதிர்த்து இல்லாது ஒழிக்க வேண்டும் என கேட்டு நிற்கின்றோம்.
அரசாங்கம் எக்காரணம் கொண்டும் குறித்த சட்டத்தை கொண்டு வரக்கூடாது என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம். இதற்கு எதிர்ப்பையும் நாங்கள் தெரிவிக்க இருக்கின்றோம். உண்மையாக எமது நியாயமான போராட்டங்களை நசுக்குவதற்காக இந்த சட்டத்தை கொண்டு வருகின்றார்கள். ஆகையால் இந்த சட்டத்தை வன்மையாக கண்டிகின்றோம்.
போராட்டங்களை நசுக்கும் திட்டம்
இதை யாருமே ஏற்றுக்கொள்ளக் கூடாது. நாடாளுமன்றம் செல்கின்றவர்கள், அங்கு பேசுபவர்கள், சகோதர இனத்தவர்கள் கூட இந்த சட்டத்தை ஏற்றுக்கொள்ளக்கூடாது என்பதுதான் எங்களுடைய நோக்கம். ஜனநாயக ரீதியில் இடம்பெற்ற எமது போராட்டங்களை ஊடக வாயிலாகவும், சமூக வலைத்தளங்கள் ஊடாகவும் நாங்கள் வெளிக்கொண்டு வந்திருக்கின்றோம்.
இங்கே இன அழிப்பு செய்யப்பட்டமை, லட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டமை, காணாமல் ஆக்கப்பட்டிருக்கின்றார்கள் என்ற விடயங்களைக் கூட சமூக வலைத்தளங்கள் ஊடாக தான் சர்வதேச மட்டத்திற்கு வெளிக்கொண்டு வந்திருக்கின்றோம். இந்த சட்டம் நடைமுறைக்கு வருமாக இருந்தால், ஊடகங்களையும், சமூக வலைத்தளங்களையும் முடக்கி அவர்கள் எம்மோடு பயணிக்க முடியாத அளவிற்கு இந்த சட்டம் கொண்டு வரப்படும் என நாங்கள் அறிந்திருக்கின்றோம்.