சசிகலாவை அ.தி.மு.க.வில் சேர்க்கும் கேள்விக்கே இடமில்லை: கே.பி.முனுசாமி

26.10.2021 09:38:14

அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி எம்.எல்.ஏ. கிருஷ்ணகிரியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

 

கேள்விக்கே இடமில்லை

 

சசிகலாவை மீண்டும் கட்சியில் சேர்க்க கூடாது என ஒரு தெளிவான முடிவை ஏற்கனவே தலைமை கழக நிர்வாகிகள் முடிவு செய்து தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர். இது தொடர்பாக அனைத்து மாவட்டங்களிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சசிகலாவிற்கு ஆதரவாக செயல்பட்ட நிர்வாகிகளும் வெளியேற்றப்பட்டுள்ளனர். எனவே, சசிகலாவை மீண்டும் சேர்க்கும் கேள்விக்கே இடமில்லை.

 

சசிகலாவிற்கு உண்மையாகவே அ.தி.மு.க. மீது பற்று இருந்தால், அவர் ஜெயலலிதாவிடம், நானோ எங்கள் குடும்பத்தினரோ அரசியலுக்கு வர மாட்டோம் என கடிதம் கொடுத்தார். அதன்படி நடந்து கொள்ள வேண்டும். கட்சியை சிறப்பாக நடத்துங்கள் என கூறினால் ஜெயலலிதாவிற்கு உண்மையான சகோதரியாக சசிகலா இருப்பார்.

 

போராட்டங்களில் ஈடுபடுவோம்

 

அ.தி.மு.க. ஒரு காலமும் சாதி, மதரீதியாக செயல்படாது. தேர்தலில் வெற்றி பெற்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசும் போது நாங்களும் மகிழ்ந்தோம். எதிர்கட்சியினர் எங்களை பாராட்டுவார்கள் என கூறினார். ஆனால், செயல்பாட்டுக்கு வரும் போது எதிர்மாறாக செயல்படுகிறார்.6 மாத கால தி.மு.க. ஆட்சியில் சொல்லும்படியாக ஒரு பணி கூட நடைபெறவில்லை. இதனை எதிர்கட்சியாகிய நாங்களும் கவனித்து வருகிறோம். தலைமை கழக நிர்வாகிகளுடன் கலந்து பேசி போராட்டங்களில் ஈடுபடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.