ஈரான் மீது அமெரிக்கா புதிய தாக்குதல்கள்!

26.05.2026 08:31:49

தெற்கு ஈரான் மீது புதிய தாக்குதல்களைத் தொடங்கியுள்ளதாகவும், ஈரானிய ஏவுகணைத் தளங்களையும் கண்ணிவெடிகளைப் புதைக்க முயன்ற படகுகளையும் குறிவைத்துள்ளதாகவும் அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது.

 

இந்தத் தாக்குதல்கள் தற்காப்புக்காக நடத்தப்பட்டதாகவும், ஈரானியப் படைகளால் ஏற்படும் அச்சுறுத்தல்களில் இருந்து நமது படையினரை பாதுகாக்கும் நோக்கில் வடிவமைக்கப்பட்டதாகவும் அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு ஓர் அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

தற்போதைய போர்நிறுத்தத்தின் போது நிதானத்தைக் கடைப்பிடித்து, அமெரிக்க இராணுவம் நமது படைகளைத் தொடர்ந்து பாதுகாத்து வருகிறது என்று மத்திய கட்டளைப் பிரிவின் செய்தித் தொடர்பாளர் கேப்டன் டிம் ஹாக்கின்ஸ் கூறினார்.

நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகையின்படி, ஹார்முஸ் நீரிணையில் அமைந்துள்ள ஈரானிய கடற்படைத் தளம் மற்றும் தெற்கு துறைமுக நகரமான பந்தர் அப்பாஸுக்கு அருகிலுள்ள ஒரு பகுதியை இந்தத் தாக்குதல்கள் குறிவைத்தன என்று கேப்டன் ஹாக்கின்ஸ் கூறினார்.

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளில் சில முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், ஆனால் மோதலை முடிவுக்குக் கொண்டுவரும் ஒப்பந்தம் உடனடியாக ஏற்படாது என்றும் ஈரான் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாய் கூறியுள்ள நிலையில் இந்தத் தாக்குதல்கள் நடந்துள்ளன.

வெடிச்சத்தங்கள் கேட்டதை அடுத்து, பந்தர் அப்பாஸில் உள்ளூர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக ஈரானிய அரசு ஊடகங்கள் முன்னதாக செய்தி வெளியிட்டிருந்தன.

 

அண்மைய அமெரிக்கத் தாக்குதல்களுக்கு ஈரான் இன்னும் பதிலளிக்கவில்லை. 

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே ஏற்படக்கூடிய எந்தவொரு அமைதி ஒப்பந்தத்திலும் இந்தத் தாக்குதல்கள் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது தெளிவாகத் தெரியவில்லை.

இந்தத் தாக்குதல்களைத் தொடர்ந்து, ஒரு ஒப்பந்தம் இன்னும் சாத்தியம் என்று கூறிய அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ, ஈரானின் உயர்மட்டப் பேச்சுவார்த்தையாளரும் வெளியுறவு அமைச்சரும் கட்டார் பிரதமரும் செவ்வாய்க்கிழமை நடத்திய பேச்சுவார்த்தைகளைச் சுட்டிக்காட்டினார்.