காற்றடிக்கும் திசையில் செல்கின்றது இலங்கை.

14.03.2026 14:51:56

இலங்கை அரசிடம் தற்போது எவ்விதத் தெளிவான வெளியுறவுக் கொள்கையும் இல்லை எனவும், நாடு காற்றுக்கும் அலைக்கும் இழுத்துச் செல்லப்படும் நிலையிலேயே உள்ளது எனவும் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது:-

 

"மத்திய கிழக்கு நெருக்கடி தொடர்பாக இலங்கை இன்று எதிர்கொண்டுள்ள சூழல் மிகவும் தனித்துவமானது. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் எக்காலத்திலும் இல்லாத வகையில், இலங்கையின் பிரத்தியேக பொருளாதார மண்டலத்துக்குள் ஒரு தாக்குதல் நடத்தப்பட்டு கப்பல் மூழ்கடிக்கப்பட்டுள்ளது. தெற்கு கடற்கரையிலிருந்து சுமார் 19 கடல் மைல் தொலைவிலேயே இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் விளைவாகக் குறைந்தது 106 மனித உயிர்கள் இழக்கப்பட்டுள்ளன.

தற்போது இலங்கை சில மனிதாபிமான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது உண்மைதான். ஆனால், அது சர்வதேச சட்டத்தின் கீழ் ஒரு கட்டாயக் கடமையாகும். இது ஏதோ ஒரு பெரிய கருணைச் செயலோ அல்லது தாராள மனப்பான்மையோ அல்ல. சர்வதேச சட்டப்படி இலங்கை அரசு செய்ய வேண்டிய ஒரு கடப்பாடாகும்.

இந்தத் தாக்குதல்கள் குறித்து இலங்கை அரசு ஒரு கண்டன அறிக்கையைக் கூட வெளியிடவில்லை. இவ்வாறான மௌனம் ஏற்கனவே பலவீனமாக உள்ள நாட்டின் பொருளாதாரத்திலும், மக்களின் வாழ்வாதாரத்திலும் உடனடியான மற்றும் நீண்டகாலப் பாதிப்பை ஏற்படுத்தும். குறிப்பாக, நமது நாட்டின் ஏற்றுமதியில் இது மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும். பதற்றமான சூழல் காரணமாகப் பல கப்பல்கள் எமது துறைமுகத்தைத் தவிர்த்துச் செல்லும் அபாயம் உள்ளது.

மறைந்த முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்க, இந்தியா மற்றும் சீனா இடையிலான எல்லை மோதலில் பயனுள்ள மற்றும் ஆக்கபூர்வமான முறையில் தலையிட்டார். ஆனால், இந்த அரசிடம் அத்தகைய எந்தவொரு பொறுப்புணர்வும் இல்லை. கசப்பான உண்மை என்னவென்றால், இன்று இலங்கைக்கு வெளியுறவுக் கொள்கை என்று எதுவுமே இல்லை." - என்றார்.