தமிழகத்துக்கு 3 தேர்தல் பொறுப்பாளர் நியமனம்!

08.01.2026 14:03:51

தமிழகம், புதுச்சேரிக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் சார்பில் பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தமிழகம், புதுச்சேரிக்கு சேர்த்து மொத்தம் 3 பேர் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். விரைவில் தமிழகம், அசாம், கேரளா, மேற்குவங்க மாநிலங்களுக்கும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கும் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் தேதிகள் மார்ச் மாதம் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது. இந்நிலையில் தான் காங்கிரஸ் கட்சி 5 இடங்களிலும் தேர்தல் வேலைகளை தீவிரமாக தொடங்கி உள்ளது.

அதன்படி தமிழ்நாடு, புதுச்சேரி, அசாம், கேரளா, மேற்கு வங்கம் ஆகியவற்றுக்கான தேர்தல் பொறுப்பாளர்களை காங்கிரஸ் கட்சி இன்று நியமனம் செய்துள்ளது. இதுதொடர்பாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் கேசி வேணுகோபால் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: காங்கிரஸ் தலைவர் சார்பில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் உடனடியாக தேர்தல் பொறுப்பாளர்களாக செயல்பட உள்ளனர்.

அசாம் * பூபேஷ் பாகேல்

* டிகே சிவக்குமார்

* பண்டு திர்கே

கேரளா

* சச்சின் பைலட்

* கேஜே ஜார்ஜ்

* இம்ரான் பிரதாப்கார்ஹி

* கங்கையா குமார்

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி

* முகுல் வாஸ்னிக்

* உத்தம் குமார் ரெட்டி

* காசி முகமது நிஜாமுதீன்

மேற்கு வங்கம்

* சுதீப் ராய் பர்மான்

* ஷகீல் அஹமது கான்

* பிரகாஷ் ஜோஷி

ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இதில் தமிழகம் - புதுச்சேரி பொறுப்பாளர்களை எடுத்து கொண்டால் முகுல் வாஸ்னிக் மகாராஷ்டிராவை சேர்ந்தவர். முன்னாள் மத்திய அமைச்சரான இவர் தற்போது காங்கிரஸில் ராஜ்யசபா எம்பியாக உள்ளார். இவர் கடந்த 2023 ஆகஸ்ட்டில் குஜராத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் கட்சி விவகாரம் மற்றும் வியூகப்பிரிவின் பொறுப்பாளராக செயல்பட்டார். அதன்பிறகு 2024 லோக்சபா தேர்தலிலும் குஜராத்தில் அவர் காங்கிரஸ் பொறுப்பாளராக செயல்பட்டார். இருப்பினும் அவரால் எதையும் சாதித்து காட்ட முடியவில்லை.

இந்த 2 தேர்தல்களிலும் பாஜகவே அமோக வெற்றி பெற்றது. அதன்பிறகு சொந்த மாநிலமான மகாராஷ்டிராவில் அவர் காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டார். ஆனால் அந்த தேர்தலிலும் காங்கிரஸ் கட்சியால் பெரிய அளவில் சாதிக்க முடியவில்லை. பாஜக மற்றும் சிவசேனா கட்சிகள் தான் அமோக வெற்றி பெற்றன. அதேபோல், உத்தம் குமார் ரெட்டி தெலுங்கானாவில் உள்ள ஹூசூர் நகர் சட்டசபை தொகுதியில் 2023ல் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தற்போது நீர்ப்பாசனம், உணவு மற்றும் நுகர்பொருள் விவகாரத்துறை அமைச்சராக உள்ளார்.

இந்திய விமானப்படையின் முன்னாள் பைலட்டான இவர் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராக உள்ளார். இவர் 2019ல் நாளகொண்டா தொகுதியின் லோக்சபா எம்பியாகவும், 1999 முதல் 2009 வரை கோடாட் தொகுதியின் எம்எல்ஏவாகவுமு், 2009 முதல் 2019 வரை ஹூசூர் நகர் தொகுதியின் எம்எல்ஏவாகவும் இருந்தார். 2015 முதல் 2021 ஜூன் மாதம் வரை தெலுங்கானா காங்கிரஸ் தலைவராக செயல்பட்டார்.

அதேபோல் காசி முகமது நிஜாமுதீன் உத்தரகாண்ட்டை சேர்ந்தவர். அங்கு அவர் 4 முறை எம்எல்ஏவாக உள்ளார். தற்போது மங்களூர் சட்டசபை தொகதியின் எம்எல்ஏவாக உள்ளார். காங்கிரஸ் கட்சியின் செயலாளராக பொறுப்பு வகித்து வரும் இவர் கடந்த ஆண்டு டெல்லி சட்டசபை தேர்தலின்போது பொறுப்பாளராக செயல்பட்டார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக டெல்லியில் காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.