:வரப்போகும் 2 ‘மெகா’ மாற்றங்கள்!

12.04.2026 13:25:39

தமிழக அரசியல் களம் இப்போது 'ஆயிரம்' ரூபாயைத் தாண்டி, 'இரண்டாயிரம்' என்கிற இலக்கை நோக்கி நகரத் தொடங்கிவிட்டது. 2026 சட்டமன்றத் தேர்தலை மையமாக வைத்து, ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் ஒரே நேர்க்கோட்டில் வந்து நின்றிருப்பதுதான் தற்போதைய ஹாட் டாபிக். தேர்தலுக்குப் பிறகு தமிழகப் பெண்களுக்குக் கிடைக்கப்போகும் இரண்டு மிக முக்கியமான செய்திகளைப் பற்றி இங்கே விரிவாகப் பார்க்கலாம்!

திட்டம் தொடங்கப்பட்ட தருணத்தில், தகுதிகள் இருந்தும் சில தொழில்நுட்பக் காரணங்களாலும், கடுமையான விதிமுறைகளாலும் லட்சக்கணக்கான விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டிருந்தன. இப்போது அந்தச் சூழல் மாறப்போகிறது. தேர்தல் முடிந்தவுடன், புதிய விண்ணப்பதாரர்களை இணைக்க அரசு தயாராகி வருகிறது. அது எந்தக் கட்சியாக இருந்தாலும் சரி.. திமுக.. அதிமுக.. தவெக யார் வெற்றி பெற்றாலும்.. கண்டிப்பாக பணம் வழங்கப்படும். இதற்காகப் புதிய பயனாளிகள் பட்டியலில் சேர்க்கப்படுவார்கள். "தகுதியுள்ள ஒரு பெண் கூட விடுபடக்கூடாது" என்கிற இலக்குடன், விதிகளில் சில தளர்வுகளைக் கொண்டுவர இரண்டு தரப்புமே முடிவு செய்துள்ளன.

இதுவரை ரேஷன் கார்டு இருந்தும் விண்ணப்பிக்காதவர்கள் மற்றும் நிராகரிக்கப்பட்டவர்களுக்கு இது ஒரு ஜாக்பாட் செய்தியாக இருக்கும். 2. தொகை இரட்டிப்பு... இனி ₹2000! இதுதான் தற்போதைய தேர்தல் பிரசாரத்தின் மிக முக்கியமான 'மாஸ்டர் ஸ்டிரோக்'. திமுக தரப்பு: "மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 'திராவிட மாடல் 2.0' திட்டத்தின் கீழ் உரிமைத் தொகை மாதந்தோறும் 2000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்" என முதலமைச்சர் ஸ்டாலின் அதிரடியாக அறிவித்துவிட்டார். அண்மையில் பிப்ரவரி மாதத்துடன் சேர்த்து வழங்கப்பட்ட 5000 ரூபாய், அதன் ஒரு முன்னோட்டம் என்கிறார்கள் ஆளுங்கட்சியினர்.

அதிமுக தரப்பு: சளைக்காத எடப்பாடி பழனிசாமி, "நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் எந்தவித நிபந்தனையுமின்றி 2000 ரூபாய் வழங்குவோம்" என உறுதி அளித்துள்ளார். அதுமட்டுமின்றி, 'கருணைத் தொகை'யாக குடும்பத்திற்கு 10,000 ரூபாய் வரை சில கூடுதல் அறிவிப்புகளையும் அடுக்கி வருகிறார் இபிஎஸ். யார் ஜெயித்தாலும், ஜூன் மாதத்திற்குப் பிறகு தமிழகப் பெண்களின் வங்கிக் கணக்குகளில் 1000 ரூபாய்க்குப் பதில் 2000 ரூபாய் சேருவது உறுதி. வெறும் 'உதவித் தொகை'யாகத் தொடங்கிய இத்திட்டம், இப்போது தமிழக அரசியலின் வெற்றி-தோல்வியைத் தீர்மானிக்கும் 'உரிமைத் தொகை'யாக விஸ்வரூபம் எடுத்துள்ளது.

மகளிர் உரிமைத் தொகை 2000 ரூபாயாக உயருவது ஒருபுறம் இருக்க, 'யார் யாருக்கெல்லாம் இது கிடைக்கும்?' என்கிற விவாதம்தான் இப்போது தமிழகத்தின் பட்டிதொட்டியெங்கும் ஹாட் டாபிக். குறிப்பாக அரசு ஊழியர் குடும்பங்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

தற்போதைய நிலவரப்படி, அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் வருமான வரி செலுத்துபவர்களின் குடும்பங்களுக்கு இந்தத் திட்டத்தில் இடமில்லை. ஆனால், "அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும்" என்கிற வாக்குறுதியை எதிர்க்கட்சிகள் முன்வைப்பதால், ஒருவேளை ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் இந்த விதியில் பெரிய மாற்றம் வரலாம். ஆளுங்க தரப்போ, "தற்போதுள்ள 1.31 கோடி பெண்களுடன், விடுபட்ட ஏழை எளிய குடும்பங்களுக்கு முன்னுரிமை" என்கிற நிலையில் இருக்கிறது. எனவே, உயர்மட்ட அரசு ஊழியர்களைத் தவிர்த்து, கடைநிலை ஊழியர்களின் குடும்பங்களுக்கு வாய்ப்பு கிடைக்குமா என்பதுதான் இப்போதைய சஸ்பென்ஸ்!