புகலிடக்கோரிக்கையாளர்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தும் பிரித்தானியா!

13.03.2024 07:47:08

நாட்டுக்கு வருகை தரும் புகலிடக்கோரிக்கையாளர்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த பிரித்தானிய அரசாங்கம் தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

அந்தவகையில் இதுவரை காலமும்  சட்டவிரோதமாக நாட்டுக்குள் வருகை தரும் புகலிடக்கோரிக்கையாளர்களின் எண்ணிக்கையை குறைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த பிரித்தானிய அரசு தற்போது  சட்டப்படி புலம்பெயர்வோரின் எண்ணிக்கையையும் கட்டுப்படுத்தும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, புலம்பெயர்தலுக்கான புதிய கடப்பாடுகளை பிரித்தானிய அரசு அறிமுகப்படுத்தியுள்ளதோகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக நேற்றுமுதல் முதியவர்கள், நோயாளிகளை கவனித்துக்கொள்ளும் பணிகளுக்கு வரும் வெளிநாட்டவர்களின் குடும்பத்தினரை, பிரித்தானியாவுக்கு அழைத்துவருவதற்கான தடை நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், எதிர்வரும் மாதம் 4 ஆம் திகதி முதல் திறன்மிகு பணியாளர்கள் விசாவில் வருபவர்களுக்கான குறைந்தபட்ச வருமான வரம்பு, 26,200 பவுண்டுகளில் இருந்து 38,700 பவுண்டுகளாக உயர்த்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், ஏப்ரல் மாதம் 11ஆம் திகதி முதல், குடும்ப விசா பெறுவதற்கான குறைந்தப்பட்ச வருமான வரம்பு 29,000 பவுண்டுகளாக உயர்த்தப்படவுள்ளதாகவும் அது தொடர்ந்தும் 38,700 பவுண்டுகள் வரை அதிகரிக்கவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.