தினமும் இறந்து பிறக்கிறோம் - பார்த்திபன்

19.11.2021 10:15:57

நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தோடு, நீதியரசர் சந்துருவையும் பாராட்டி கவுரவித்தார். அவருக்கு ஓவியர் ஸ்ரீதர் வரைந்த நினைவுப்பரிசு ஒன்றையும் வழங்கினார். இந்த நிகழ்வில் பாக்யராஜ், பிரபுதேவா, ரஞ்சித், பாரதிராஜா, விஜய்சேதுபதி, ரவிவர்மன், இசையமைப்பாளர் சத்யா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

இதுப்பற்றி இயக்குனரும், நடிகருமான பார்த்திபன் அறிக்கை: பொதுவாக நான் பிறந்த நாளை கொண்டாடுவதில்லை, உருவமாக நான் வெளி வந்த நாளை விட, ஒரு கலைஞனாக பார்த்திபன் என்ற பெயரிட்டு என்னை திரையுலகுக்கு அறிமுகப்படுத்திய பாக்யராஜ் மூலமாக, நான் பிறந்த பின் தான் என் வாழ்க்கையில் சுபிட்சம் தொடங்கியது.

1989-90களில் என் பிறந்த நாளின் போது, மிகப்பெரிய விழாவாக நான் கொண்டாட, அன்றைய செய்திதாள்களில் என்னை வாழ்த்தி வந்த விளம்பரங்கள் ஏராளம். நடிகர் சிவகுமார் என்னிடம் சொன்னார், 'சில ஆண்டுகளில் இது கொஞ்சம் குறையலாம், குறையும்போது உன் மனம் வருத்தப்படும் வேண்டாமே' என்றார். அன்றிலிருந்து பிறந்தநாள் கொண்டாடுவதை நிறுத்தி விட்டேன்.

நாம் தினந்தோறும் இறந்து, மறுநாளில் பிறக்கிறோம் அது தான் உண்மை. ஒவ்வொரு உறக்கமும் ஒரு சிறிய மரணம். விடிந்த பின் தான் தெரிகிறது இன்னும் வாழ்க்கை மிச்சமிருக்கிறதென்று,அப்படி பல முறை நாம் மடிந்தும் பிறக்கிறோம். மரணம் என்பது கொஞ்சம் மானம் போகும்போது கூட நிகழ்கிறது. அப்படி எல்லோர் வாழ்விலும் சில மரணங்கள், எனக்கும் சில மரணங்கள் ஏற்பட்டிருக்கின்றன.

ஒரு மரணத்திலிருந்து நான் மீண்டும் உயிர்த்தெழுந்தது குழந்தைகளின் அன்பால். அபி , கீர்த்தி, ராக்கி மூவரும் மீண்டும் ஒரு முறை எனக்கு உயிர்பிச்சை தந்தார்கள். அன்றிலிருந்து துவங்கியது மீண்டும் ஒரு நம்பிக்கையான வாழ்க்கை.

திரு.சந்துரு அவர்கள் ஒரு இன்ஷ்பரேசனாக இளைஞர்களுக்கு 'ஒரு யோக்கியனா வாழ்ந்தா, இப்படிபட்ட பெருமையெல்லாம் கிடைக்கும், இந்த வாழ்கையில பணத்த மீறி, புகழ மீறி உள்ளுக்குள் ஒரு நல்ல மனிதனாக, நாம் எடுத்து கொண்ட தொழிலை, சீராக சிறப்பாக செய்வதற்கு வெளியிலிருந்து யாரும் பாராட்ட தேவையில்லை, அகம் மகிழ்ந்து போகுமதில், அப்படிபட்ட அகமகிழ்ச்சியை, அதன் விளைவை அதன் மதிப்பை, இன்றைய இளைஞர்களும் தெரிந்து கொள்ள சந்துரு ஒரு முன்னுதாரணமாக திகழ்கிறார்'. அதே போல் நானும் இந்த பிறந்த நாள் ஏதாவது ஒரு வகையில், யாருக்கேனும் உதவும் வகையில் அமைய வேண்டுமென்று ஆசைப்பட்டு, இப்படியான ஒரு நிகழ்ச்சியை நடத்தி மகிழ்ச்சியை தேடிக்கொண்டேன்.

இவ்வாறு தெரிவித்துள்ளார்.