கோட்டாபய விதித்த தடையை நீக்கிய ரணில்!

08.08.2022 09:46:16

 

பிரபலமான களை கொல்லியான கிளைபோசெட்டின் இறக்குமதித் தடையை இலங்கையின் நிதி அமைச்சகம் நீக்கியுள்ளது.

நிதி அமைச்சராக அதிபர் ரணில் விக்ரமசிங்க கையொப்பமிட்ட வர்த்தமானியின் அடிப்படையில் தடைப்பட்டியலில் இருந்து கிளைபோசேட் நீக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், 2022 ஆகஸ்ட் 5 ஆம் திகதியன்று கிளைபோசெட்டின் இறக்குமதி நடைமுறைக்கு வரும் என்றும் நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இறக்குமதிக்கு தடை

முன்னதாக 2015 ஆம் ஆண்டு களைகொல்லி இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டபோதும், தேயிலை மற்றும் ரப்பருக்கு கிளைபோசேட் பயன்பாடு மூன்று ஆண்டுகளுக்கு மாத்திரம் அனுமதிக்கப்பட்டது.

மேலும், 2019 ஆம் ஆண்டில் மலர் வளர்ப்புத் தொழிலில் நோய் நீக்கம் மற்றும் நோயுற்ற கரும்புச் செடிகள் மற்றும் தென்னை மரங்களின் இலைவாடல் நோயை அகற்றுவதற்காக கட்டுப்பாட்டு அளவில் கிளைபோசெட்டை இறக்குமதி செய்ய அனுமதிக்கப்பட்டது.

2019 ஆம் ஆண்டில் இருந்து 100 சதவிகித இயற்கை விவசாயத்திற்கு செல்ல அரசாங்கம் கொள்கை முடிவை எடுத்ததால் 2021 ஆம் ஆண்டில் மற்றொரு வேளாண் இரசாயனத்துடன் கிளைபோசெட் மீண்டும் தடை செய்யப்பட்டது.

 

கோட்டாபய விதித்த தடை

சிறிலங்காவின் முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச பதவியேற்றதன் பின்னர்  இரசாயன உரங்கள் மற்றும் களைகொல்லிகளுக்கான இறக்குமதிக்கு தடைவிதித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

எனினும், இந்த இரசாயன இறக்குமதித்தடையை ரணில் விக்ரமசிங்க பதவி ஏற்றதன் பின்னர் நீக்கியது சுட்டிக்காட்டத்தக்கது.