உலக சுகாதார அமைப்பிலிருந்து விலகியது அமெரிக்கா!

23.01.2026 14:01:53

அமெரிக்கா, உலக சுகாதார அமைப்பிலிருந்து (WHO) அதிகாரப்பூர்வமாக விலகியுள்ளது. ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் தனது பதவியேற்ற முதல் நாளிலேயே WHO-விலிருந்து விலகும் உத்தரவை வெளியிட்டிருந்தார். இப்போது அந்த முடிவு நடைமுறைக்கு வந்துள்ளது. அமெரிக்கா உலக சுகாதார அமைப்பிற்கு 260 மில்லியன் டொலர் நிலுவை கட்டணம் செலுத்தாமல் விலகியிருப்பது சட்ட ரீதியாக சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

“அமெரிக்க மக்கள் ஏற்கனவே போதுமான அளவு செலுத்தியுள்ளனர்” என அமெரிக்க வெளியுறவு துறை தெரிவித்துள்ளது.

இதனால் உலக சுகாதார அமைப்பின் நிதி நிலைமை கடுமையாக பாதிக்கப்பட்டு, பணியாளர்களில் சுமார் 25 சதவீதம் குறைப்பு செய்யப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அடானோம், “இது உலக சுகாதார பாதுகாப்பிற்கு பெரிய அச்சுறுத்தல்” என எச்சரித்துள்ளார்.

பில்லியன் கணக்கான நிதி வழங்கும் பில் கேட்ஸ் கூட, “அமெரிக்கா மீண்டும் உலக சுகாதார அமைப்பில் சேர வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

அமெரிக்கா இனி உலக சுகாதார அமைப்புடன் பார்வையாளர் நாடாக கூட செயல்படாது என்றும், நேரடியாக பிற நாடுகளுடன் இணைந்து நோய் கண்காணிப்பு மற்றும் சுகாதார முன்னுரிமைகளை மேற்கொள்ளும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த விலகல், உலகளாவிய தொற்றுநோய் தடுப்பு மற்றும் சுகாதார ஒத்துழைப்பில் பெரிய இடைவெளியை உருவாக்கும் அபாயம் உள்ளது. WHO-வின் நிர்வாக குழு பிப்ரவரி மாதத்தில் அமெரிக்காவின் விலகலை விவாதிக்க உள்ளது.