பிரசாரம் ஓய்ந்ததும் 144 தடை உத்தரவு : தேர்தல் கமிஷன் தீவிர ஆலோசனை

16.02.2022 06:00:35

நகர்ப்புற தேர்தல் பிரசாரம், நாளை மாலை நிறைவு பெற்றதும், 144 தடை உத்தரவை பிறப்பிக்க, மாநில தேர்தல் கமிஷன் ஆலோசித்து வருகிறது.


தமிழகத்தில் உள்ள, 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளுக்கு, 19ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்க உள்ளது. இத்தேர்தலில், தி.மு.க., - காங்., - இந்திய கம்யூ., - மார்க்சிஸ்ட் கம்யூ., - வி.சி., - ம.தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்தும்,
அ.தி.மு.க., சிறிய கட்சிகளுடன் இணைந்தும் போட்டியிடுகின்றன. பா.ஜ., - பா.ம.க., - தே.மு.தி.க., - மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் தனித்து போட்டியிடுகின்றன. உள்ளூர் மக்களின் ஆதரவுடன் வெற்றிப் பெறுவதற்கு, சுயேச்சைகளும் அதிகளவில் களம் இறங்கி உள்ளனர்.

அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள், வழக்கம் போல ஊர் ஊராக சுற்றுப் பயணம் செய்து, பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் கமிஷன் உத்தரவுப்படி, நாளை மாலை 6:௦௦ மணியுடன் பிரசாரம் முடியவுள்ளது. எனவே, இறுதிகட்ட பிரசாரத்தில் வேட்பாளர்கள் இறங்கிஉள்ளனர். இதற்கிடையே பிரசாரம் ஓய்ந்ததும், வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் வினியோகம் நடக்க வாய்ப்புள்ளது. இப்போதே சில இடங்களில் பரிசு பொருட்கள் வினியோகம் துவங்கிஉள்ளது. அதை தடுக்கும் வகையில், பிரசாரம் ஓய்ந்ததும் 144 தடை உத்தரவை பிறப்பிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக, போலீஸ் உயர் அதிகாரிகளுடன், தேர்தல் கமிஷன் அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.