மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்டுள்ள யோசனை மிகவும் பயங்கரமானது.

26.03.2021 09:32:35

 

ஜெனிவா மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்டுள்ள யோசனை மிகவும் பயங்கரமானது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் வைத்து செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது பேசிய அவர்,

வெளிவிவகார அமைச்சர் பொம்மையாக மாறியுள்ள பின்னணியில், எவ்வித தகுதியும் இல்லாத அரசியல் ஆதரவாளர்கள், வெளிவிவகார அமைச்சிலும் ராஜதந்திர சேவையிலும் பொறுப்பான பதவிகளை வகித்து வரும் சூழ்நிலையில், இது ஆச்சரியப்பட வேண்டிய விடயமல்ல.

எனினும் எதிர்வரும் செப்டம்பர் மாதமளவில் அரசாங்கம் உட்பட அனைவரும் இந்த யோசனையின் பயங்கரத்தை உணர்வார்கள்.

ராஜதந்திர தொடர்புகள் மற்றும் உலக அரசியல் குறித்து எந்த புரிதலும் இல்லாத நபர், வெளிவிவகார அமைச்சின் செயலாளராக பதவி வகித்து வருகிறார். இவரே அமைச்சருக்கு மேலாக இருந்து வெளிவிவகார அமைச்சை நிர்வகித்து வருகிறார்.

தினேஷ் குணவர்தன என்பவர் அமைச்சின் செயலாளரின் தேவைக்கு அமைய ஆடும் பொம்மை மாத்திரமே என்றார்.