மெடிக்கல் ஸ்டோரில் பார்சல் வெடிகுண்டு வெடித்தது
மேற்கு வங்காள மாநிலம் உத்தர் தினஜ்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு மெடிக்கல் ஸ்டோரில் பார்சல் குண்டு திடீரென வெடித்து சிதறியது. இதில், 4 பேர் பலத்த காயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனயில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 2 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. வெள்ளிக்கிழமை மதியம் ஹெம்தாபாத்தில் உள்ள பஹரைல் என்ற இடத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
இந்த தாக்குதலில் எலக்ட்ரிக் ரிக்ஷா டிரைவர் மற்றும் ஒரு பெண் சம்பந்தப்பட்டிருப்பது போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதுபற்றி காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘வெடிகுண்டு பார்சலை எலக்ட்ரிக் ரிக்ஷா டிரைவர், மருந்தகத்தில் கொடுத்துள்ளார். முதற்கட்ட விசாரணையில் ஒரு பெண்ணுக்கும் இதில் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இருவரையும் தேடி வருகிறோம். வெடிகுண்டின் சிதைந்த பாகங்கள் மற்றும் பார்சல் பெட்டியின் மாதிரிகள் தடயவியல் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளன’ என்றார்.