உலகிலேயே முதல் டிஜிட்டல் அரசாக மாறியது துபாய் !

13.12.2021 16:00:00

உலகின் முதல் காகிதமில்லா அரசு என்ற பெருமையை துபாய் பெற்றுள்ளதாக எமிரேட்ஸ் பட்டத்து இளவரசர் ஷேக் ஹம்தான் (Sheikh Hamdan) தெரிவித்துள்ளார்.

கடந்த 2018-ம் ஆண்டு முதல் துபாயில் காகிதமில்லா டிஜிட்டல் நகரமாக மாற்றும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தை 5 கட்டங்களாக பிரித்து பட்டியலிடப்பட்டன. இதன் 5-வது கட்டத்தின் முடிவில், துபாயில் 45 அரசு துறைகளும் காகிதமற்றவையாக மாற்றப்பட்டன.

இது தொடர்பில் அவர் வெளியிட்ட அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

"துபாயில் 45 அரசு துறைகள் 1,800 க்கும் மேற்பட்ட டிஜிட்டல் சேவைகள் மற்றும் 10,500 க்கும் மேற்பட்ட முக்கிய பரிவர்த்தனைகளை வழங்குகின்றன. இந்த சாதனை புதுமை, படைப்பாற்றல் மற்றும் எதிர்காலத்தில் கவனம் செலுத்தும் பயணம்.

இது துபாயின் உலக முன்னணி டிஜிட்டல் மூலதனம் மற்றும் வாடிக்கையாளர்களின் மகிழ்ச்சியை மேம்படுத்தும். அரசாங்க செயல்பாடுகள் மற்றும் சேவைகளை வடிவமைப்பதில் இது ஒரு முன்மாதிரியாக அதன் நிலையை வலுப்படுத்துகிறது.

இத்திட்டத்தின் மூலம் துபாய் அரசாங்கத்திற்கு 350 மில்லியன் அமெரிக்க டொலர் சேமிக்கப்படுவதுடன்  14 மில்லியனுக்கும் அதிகமான மனித வேலை நேரமும் மிச்சமாகிறது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.