கைதிகளைப் பார்வையிட விசேட சந்தர்ப்பங்கள்

12.04.2024 08:04:48

தமிழ் – சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு இன்றும் நாளையும் சிறைக் கைதிகளைப் பார்வையிட விசேட சந்தர்ப்பங்கள் வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் காமினி டீ. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

 

தற்போதுள்ள விதிமுறைகள், முறையான சுகாதார மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளுக்கு அமைவாக பார்வையிட வரும் நபர் வீட்டிலிருந்து கொண்டு வரும் உணவு, இனிப்புப் பண்டங்கள் மற்றும் சுகாதார பொருட்களை மாத்திரம் கைதிகளுக்கு வழங்குவதற்கு அனைத்து சிறைச்சாலைகளிலும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் காமினி டீ. திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில், தமிழ் – சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு 779 சிறைக் கைதிகளுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவும் தெரிவித்துள்ளது.

அதேநேரம், நாடு முழுவதும் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் இன்றும், நாளையும் என இரு தினங்களுக்கு மூடப்பட்டிருக்கும் என மதுவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.

தமிழ் – சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு இவ்வாறு மதுபானசாலைகள் மூடப்பட்டிருக்கும் என அத்திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.