பிரதமர் ஸ்டார்மரை கடுமையாக விமர்சித்த ட்ரம்ப்!

08.03.2026 12:50:09

ஈரான் போரில் அமெரிக்காவிற்கு பிரித்தானியாவின் உதவி தேவை இல்லை என டொனால்ட் ட்ரம்ப் பிரதமர் கெய்ர் ஸ்டார்மரை கடுமையாக சாடியுள்ளார். தமது ட்ரூத் சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ள ஜனாதிபதி ட்ரம்ப், பிரித்தானியா ஒரு காலத்தில் அமெரிக்காவின் சிறந்த நட்பு நாடாக இருந்தது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஈரான் போரில் அமெரிக்கா வென்று விட்டது என்றும், இதன் பிறகு உதவியுடன் வருபவர்கள் தேவையில்லை என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். ஈரானுக்கு எதிராக பிரித்தானியாவின் இராணுவத்தளங்களை அமெரிக்கா பயன்படுத்துவதற்கு பிரதமர் ஸ்டார்மர் அனுமதி மறுத்ததை அடுத்து ட்ரம்ப் கடுமையாக விமர்சித்திருந்தார்.

அத்துடன், பிரித்தானியாவின் செயற்பாடுகளில் தாம் திருப்தியாக இல்லை என்றும் குறிப்பிட்டிருந்தார். ஸ்டார்மர் தற்போது இரண்டு விமானம் தாங்கும் கப்பல்களை மத்திய கிழக்கில் அனுப்புவதாக வெளியான தகவலை அடுத்து, அதன் தேவை தற்போது இல்லை என்றும், ஆனால், உங்கள் செயற்பாடுகளை நினைவில் வைத்திருப்போம் என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

ஈரான் போரை அமெரிக்கா வென்றுவிட்டதாக குறிப்பிட்டுள்ள ட்ரம்ப், இனி பிரித்தானியாவின் உதவி தேவையில்லை என்றும் தெரிவித்துள்ளார். ஈரான் மீதான போரை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என கூறிவரும் ஸ்டார்மர், ஈரானுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஆனால், மறுப்பேதுமில்லாமல் பிரித்தானியா தங்கள் தளங்களைப் பயன்படுத்த அனுமதித்திருக்க வேண்டும் என்றும், பல நாடுகள் அவ்வாறு செய்துள்ளது என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

பிரித்தானியாவில் இருந்து HMS Prince of Wales போர்க்கப்பல் மத்திய கிழக்கு நோக்கி புறப்பட தயாராவதாக வெளியான தகவலை அடுத்தே ட்ரம்ப் தமது ட்ரூத் பக்கத்தில் கொந்தளித்துள்ளார்.

இதற்கிடையில், அமெரிக்க குண்டுவீச்சு விமானங்களை RAF ஃபேர்ஃபோர்ட் தளத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளது. மட்டுமின்றி, எதிரிகளின் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளிலிருந்து சைப்ரஸைப் பாதுகாக்க பிரதமரும் அரசாங்கமும் வேகமாகச் செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டுள்ளது.

ஆனால் வளைகுடாவில் நடக்கும் போருக்கு இங்கிலாந்து தயாராக இல்லை என்பதை பிரதமர் ஸ்டார்மர் மறுத்துள்ளார்.