2047ல் இந்தியா வல்லரசு.
பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் நிதின் நபினின் இரண்டு நாள் லக்னோ பயணம் நிறைவடைந்த நிலையில்,உத்தரப் பிரதேசத்தில், பாஜக மூன்றாவது முறையாக 'அபார பெரும்பான்மையுடன்' மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று அவர் மீண்டும் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
பாஜகவின் மிக இளம் வயதான தலைவரான நபின், 2027 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி பங்காளிகளுடன் இணைந்து கட்சி செயல்படும் என்றும், கட்சியின் நலத்திட்டங்கள் ஒவ்வொரு வாக்காளரையும் சென்றடைவதை உறுதி செய்ய தொண்டர்கள் தரைமட்டத்தில் உழைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் சேவை மனப்பான்மையுடன் மக்களுக்காக பணியாற்றியுள்ளனர் என்றும், 2027-ல் மீண்டும் என்.டி.ஏ கூட்டணி ஆட்சி அமைக்கும் என்றும் நபின் நம்பிக்கை தெரிவித்தார். இந்த பயணத்தின் போது அப்னா தளம் ஆர்.எல்.டி போன்ற கூட்டணி கட்சித் தலைவர்களையும், முன்னாள் மாநிலத்தலைவர்களையும் அவர் சந்தித்து ஆலோசித்தார். இந்த சந்திப்புகளுக்குப் பிறகு, கூட்டணியின் ஒருங்கிணைப்பை மேம்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டதாக அதன் தலைவர்கள் தெரிவித்தனர்.
மாநில துணை முதல்வர் கேசவ் பிரசாத் மௌரியாவும் இந்த கூட்டணியின் வெற்றியை உறுதிப்படுத்தினார். உத்தரப் பிரதேச மக்கள் குண்டா ராஜ்ஜியம், மாஃபியா ஆட்சி அல்லது வம்ச அரசியல் மற்றும் கலவரங்களை விரும்பவில்லை என்றும், அவர்கள் வளர்ச்சி, நல்லாட்சி மற்றும் பாதுகாப்பையே விரும்புகிறார்கள் என்றும் அவர் கூறினார். கடந்த 10 ஆண்டுகளில் செய்த பணிகளின் பலத்தால் யோகி ஆதித்யநாத் தலைமையில் கூட்டணி மீண்டும் வெல்லும் என்று மௌரியா குறிப்பிட்டார்.
2017-ம் ஆண்டு தேர்தலில் பெற்ற பிரம்மாண்ட வெற்றியை மீண்டும் 2027 சட்டமன்றத் தேர்தலிலும் அறுவடை செய்யவும், 2047-க்குள் இந்தியாவை வல்லரசாக்கவும் இந்த அனைத்துக் கட்சிகளும் தங்களுக்குள் சிறந்த ஒருங்கிணைப்புடன் வேலை செய்ய முடிவெடுத்துள்ளன.