உக்ரைன் ஜனாதிபதியின் மனைவி கோரிக்கை!

21.07.2022 11:04:00

 

ரஷ்ய ஏவுகணை தாக்குதலில் இருந்து பாதுகாத்துக்கொள்ள வான் பாதுகாப்பு அமைப்புகளை அனுப்புமாறு உக்ரைன் ஜனாதிபதியின் மனைவி ஒலனா ஸெலன்ஸ்கா கோரிக்கை விடுத்துள்ளார்.

 

அமெரிக்க நாடாளுமன்றத்தில் நேற்று (புதன்கிழமை) நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே உரையாற்றும் போதே அவர் இந்த கோரிக்கையை முன்வைத்தார்.

இதன்போது அவர் கூறுகையில், ‘துரதிர்ஷ்டவசமாக போர் முடிவுக்கு வரவில்லை. பயங்கரவாதம் தொடர்கிறது. இந்த போரில் கொல்லப்பட்டவர்கள் சார்பாகவும், கை கால்களை இழந்தவர்கள் சார்பாகவும், இன்னும் உயிருடன் இருப்பவர்கள் சார்பாகவும், போர் நடைபெறும் முன்களப் பகுதியில் இருந்து தங்கள் குடும்பத்தினர் திரும்ப வருவார்கள் என்ற நம்பிக்கையில் காத்திருப்பவர்கள் சார்பாக வேண்டுகோள் விடுக்கிறேன்.

நான் கேட்க விரும்பாத ஒன்றைக் கேட்கிறேன், ஆயுதங்களைக் கேட்கிறேன். ஏவுகணை தாக்குதலில் இருந்து பாதுகாத்துக்கொள்ள வான் பாதுகாப்பு அமைப்புகளை கேட்கிறேன்’ என கூறினார்.

இதனையடுத்து, உக்ரைனுக்கு அதிக எண்ணிக்கையிலான துல்லியமான ரொக்கெட் ஏவுகணைகளை அனுப்ப அமெரிக்கா உறுதியளித்துள்ளது.

இதனிடையே, உக்ரைனின் கிரீமியாவைப் போலவே, அந்த நாட்டில் தாங்கள் ஆக்கிரமித்துள்ள மேலும் சில பகுதிகளை தங்களுடன் இணைத்துக்கொள்ள ரஷ்யா திட்டமிட்டு வருவதாக அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தித் தொடர்பாளர் ஜோன் கிர்பி எச்சரித்துள்ளார்.

அதேவேளை, உக்ரைன் போரால் இதுவரை சுமார் 15 ஆயிரம் ரஷ்ய படைகள் உயிரிழந்துள்ளதாக அமெரிக்க உளவுத்துறை தெரிவித்துள்ளது. மேலும் 45 ஆயிரம் பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.