தேன் உற்பத்தி பூங்காவில் புதிய தொழில் நுட்பங்கள்- அமீரக மந்திரி நேரில் ஆய்வு
துபாய் ஹத்தா தேன் உற்பத்தி பூங்காவில் பயன்படுத்தப்படும் நவீன தொழில்நுட்பங்கள் குறித்து அமீரக பருவமாறுபாடு மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் மந்திரி டாக்டர் அப்துல்லா பெல்ஹைப் அல் நுயைமி அதிகாரிகளுடன் நேரில் ஆய்வு செய்தார்.
துபாய் ஹத்தா மலைப்பகுதியில் உள்ள தேன் உற்பத்தி செய்யும் பண்ணைகளில் புதிய தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட உள்ளது. இதை ஆய்வு செய்வதற்காக அமீரக பருவமாறுபாடு மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் மந்திரி டாக்டர் அப்துல்லா பெல்ஹைப் அல் நுயைமி அதிகாரிகளுடன் நேற்று அங்கு வந்தார். அவர் கவச உடை அணிந்தபடி அங்குள்ள தேன் அடைகளை எடுத்து பார்த்தார்.
அமீரக பருவமாறுபாடு மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் ஆதரவில் ஹத்தா தேன் உற்பத்தி பூங்காவில் புதிய தொழில்நுட்பங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் தேன் உற்பத்தியை அதிகரிக்கவும், சர்வதேச தரத்தில் ஹத்தா தேனை சந்தைப்படுத்தவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. உலக அளவில் தேன் உற்பத்தியில் நிலவும் போட்டித்தன்மையை சமாளிக்கும் வகையில் இந்த ஏற்பாடானது செய்யப்பட்டுள்ளது.
இங்குள்ள பெரிய தேன் உற்பத்தி பண்ணையில் சீசனுக்கு 20 டன் எடையுள்ள தேன் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் தேன் அமீரகம் மட்டுமல்லாமல் சவுதி அரேபியா, ஜோர்டான், ஓமன், எகிப்து மற்றும் சூடான் ஆகிய நாடுகளுக்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. அமீரக விவசாயத்துறையில் தேன் உற்பத்தியானது மிக முக்கிய பொருளாதார பங்கினை வகிக்கிறது.
இதற்காக சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் சார்பில், இந்த பண்ணைகளில் பல்வேறு புதிய தொழில்நுட்பங்களை செயல்படுத்த திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. மேலும் தேன் உற்பத்திக்கு குறிப்பிட்ட சில தேனிக்களின் வகைகளையே இறக்குமதி செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும் தடை செய்யப்பட்டுள்ள தேனீ இனங்களை தேன் உற்பத்திக்கு பயன்படுத்தக்கூடாது.
தேன் உற்பத்தியாளர்களுக்கு ஆதரவாக தேனீ வளர்ப்பில் அதற்கு அளிக்கப்படும் உணவு மற்றும் ஊட்டச்சத்துகளை அளிப்பதற்கு அனுமதி பெற மின்னணு சேவைகள் விரைவில் அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின் போது அரசுத்துறை அதிகாரிகள் மற்றும் தேன் உற்பத்தியாளர்கள் பலர் உடன் இருந்தனர்.