கண்தானம், ரத்த தானத்தை இந்தியா முழுக்க விரிவுப்படுத்தும் சிரஞ்சீவி

20.10.2021 16:16:39

தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி தனது அறக்கட்டளை மூலம் ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் ரத்ததானம், கண்தானம் செய்யும் பணிகளை செய்து வருகிறார். இதற்காக அவர் இரண்டு மாநிலங்களிலும் பல்வேறு இடங்களில் ரத்த வங்கி அமைத்துள்ளார். இந்த பணியை அவர் இந்தியா முழுக்க விரிவுபடுத்த திட்டமிட்டிருக்கிறார். நாடு முழுக்க ரத்த வங்கியும் கண்தான வங்கியும் ஏற்படுத்த திட்டமிட்டிருக்கிறார்.

இதன் முதற்கட்டமாக ரத்ததானம், கண்தானம் குறித்த தனது இணைய தளத்தை இந்தியாவில் உள்ள 25 மொழிகளில் தொடங்கி உள்ளார். ஐதராபாத்தில் சிரஞ்சீவியின் மகனும் நடிகருமான ராம்சரண் இதனை தொடங்கி வைத்தார்.

பின்னர் இதுகுறித்து அவர் கூறியதாவது: இனி மொழி பிரச்சினை இன்றி மக்கள் ரத்ததானம், கண் தானம் செய்ய முன் வரலாம். இவர்களுக்காக இனி ஆன்-லைன் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது நமக்கெல்லாம் பெருமையாகும். மேலும், கே.சிரஞ்சீவி எனும் புதிய இணையதளமும் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சிரஞ்சீவி இதுவரை நடித்த படங்கள், பாடல்கள், அவரது வாழ்க்கை வரலாறு போன்றவை இடம் பெற்றுள்ளது. இது அவரது ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக இருக்கும். என்றார்.