பாதுகாப்பு ஒப்பந்தத்தை நாடாளுமன்றில் முன்வைப்போம்!

04.05.2025 14:23:00

இந்தியாவுடன் கைச்சாத்திடப்பட்ட பாதுகாப்பு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் ஒருசில விடயங்கள் இருதரப்பு இணக்கப்பாட்டுக்கு எட்டப்பட்டுள்ளது. இந்தியாவுடன் இவ்விடயம் குறித்து கலந்துரையாடி வெகுவிரையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை பாராளுமன்றத்துக்கு சமர்பிப்பிபேன் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

தனியார் ஊடகத்துடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்தியாவுடன் அண்மையில் கைச்சாத்திடப்பட்ட பாதுகாப்பு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு எவ்வித அச்சுறுத்தலும் கிடையாது. வலுசக்தி துறையின் சுயாதீனத்தன்மை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நாட்டின் வலுசக்தி துறை அச்சுறுத்தலுக்குள்ளானால் தேசிய பாதுகாப்பு பலவீனமடையும்.

இலங்கைக்கு மின்சாரத்தை விநியோகிக்கும் பொறுப்பை அரசாங்கம் இந்தியாவுக்கு வழங்கியுள்ளதாக எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றது.

மின்சாரத்துறையின் சுயாதீனம் பற்றி தற்போது பேசுபவர்கள் தான் கடந்த ஆண்டு மின்சார சபையின் சுயாதீனத்தை அச்சுறுத்தலுக்குள்ளாக்கும் புதிய மின்சார சபை சட்டத்தை இயற்றினார்கள்.இந்த சட்டத்தை வெகுவிரைவில் திருத்தம் செய்வோம்.

முப்படைகளின் எண்ணிக்கை குறைக்கப்படும். இதனை பகிரங்கமாகவே குறிப்பிடுகிறேன். இராணுவ படையின் எண்ணிக்கை 1 இலட்சமாகவும், கடற்படையின் எண்ணிக்கை 40 ஆயிரமாகவும், விமானபடையின் எண்ணிக்கை 18 ஆயிரமாகவும் வரையறுக்கப்படும்.

முப்படைகளின் எண்ணிக்கையை குறைத்து பாதுகாப்பு துறைக்கு புதிய நவீன தொழில்நுட்ப சாதனங்கள் மற்றும் ஆயுதங்களை பெற்றுக்கொள்வதற்காகவே நிதி நெருக்கடிக்கு மத்தியில் இம்முறை பாதுகாப்பு அமைச்சுக்கு அதிகளவான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவுடன் கைச்சாத்திடப்பட்ட பாதுகாப்பு புரிந்துணர்பு ஒப்பந்தம் பற்றி மாறுப்பட்ட பல விடயங்கள் குறிப்பிடப்படுகின்றன. இராணுவ பயிற்சி, புலனாய்வு தகவல் பரிமாற்றம் உட்பட பொதுவான விடயங்கள் மாத்திரமே இந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.

இலங்கையின் தேசிய பாதுகாப்பு குறித்த தீர்மானங்களை எடுக்கும் உரிமை இலங்கை அரசுக்கு உண்டு என்று இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. குற்றச்சாட்டுக்களை முன்வைப்பவர்கள் இதனை அறியாமல் இருப்பது ஆச்சரியத்துக்குரியது.

பாதுகாப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஏன் பகிரங்கப்படுத்தவில்லை என்று கேள்வியெழுப்பப்படுகிறது. பாதுகாப்பு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் ஒருசில விடயங்கள் இருதரப்பு இணக்கப்பாட்டுக்கு எட்டப்பட்டுள்ளது.

ஆகவே இந்தியாவுடன் இவ்விடயம் குறித்து கலந்துரையாடி அடுத்த வாரமல்ல வெகுவிரையில் இந்தியாவுடனான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை பாராளுமன்றத்துக்கு சமர்பிப்பிபேன்.

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அமைதியற்ற நிலை காணப்படுகின்ற சூழலில் கொழும்புக்கு குண்டுத்தாக்குதல் நடத்தப்படும் என்றும் ஒருசிலர் குறிப்பிடுகின்றனர்.

இவ்வாறானவர்களின் கருத்துக்கள் குறித்து அவதானம் செலுத்த போவதில்லை.நாட்டின் தேசிய பாதுகாப்பை சகல துறைகளிலும் உறுதிப்படுத்தியுள்ளோம் என்றார்.