நான்கு பேருடனான விண்வெளி பயணம் வெற்றி

19.09.2021 13:04:05

மூன்று நாள் விண்வெளி பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த நான்கு விண்வெளியாளர்கள் பாதுகாப்பாக பூமி திரும்பியுள்ளனர்.

இவர்கள் நால்வரும், முதன் முதலாக விண்வெளிக்கு சென்ற சாதாரண மக்கள் என்ற சாதனையை நிலைநாட்டியுள்ளனர்.

புளோரிடாவில் இருந்து கடந்த புதன்கிழமை விண்வெளிக்கு சென்ற இவர்கள் அடையாளம் இடப்பட்ட குறிப்பிட்ட கடல் பிராந்தியத்தில் மீள இறங்கியுள்ளனர்.

இவர்கள் பயணித்த விண்ஓடம் பரசூட்டின் மூலம் கடலில் இறங்கிய போது படகுகள் மூலம் அவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

அமெரிக்க கோடிஸ்வரரான எலோன் மஸ்க்கின் தலைமையிலான இந்த குழுவினர் பெருந்தொகை பணத்தினை செலுத்தி இந்த பயணத்தை நிறைவு செய்துள்ளனர்.

இவர்கள் செலுத்திய பணம் குறித்த விபரங்கள் வெளியிடப்படாத போதிலும், ‘ரைம் மகசீன்’ சஞ்சிகை வெளியிட்ட தகவலின்படி 20 கோடி அமெரிக்க டொலர்கள் வழங்கப்பட்டிருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

விண்வெளி பயணத்திற்காக 6 மாத பயிற்சியில் ஈடுபட்ட பொழுதிலும் உயர்மட்ட பயிற்சிகள் இவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களுக்கான பணிப்புரைகள் அமெரிக்க கட்டுப்பாட்டு நிலையத்தில் இருந்து விஞ்ஞானிகளினால் வழங்கப்பட்டது.

பூமியில் இருந்து 575 கிலோமீற்றர் தூரத்தில் பயணித்த இவர்கள், விண்வெளியில் 3 நாட்கள் சஞ்சரித்த காலப்பகுதியில் தினமும் பூமியினை 15 முறை சுற்றியுள்ளனர்.

‘ட்ரகன்’ என பெயரிடப்பட்டுள்ள அவர்களது விண்ஓடம், சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு அருகாமையில் செல்ல அனுமதிக்கப்பட்டிருக்கவில்லை.

விண்வெளியில் இவர்களால் சேகரிக்கப்பட்ட பொருட்கள் ஏலத்தில் விடப்பட்டு அதன் மூலம் பெறப்படும் நிதி டெனிஸ்சீயில் உள்ள புனித ஜூட்ஸ் சிறுவர் ஆராய்ச்சி நிலையத்திற்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விண்வெளி பயணத்தை பூமியில் இருந்து நெறிப்படுத்திய இயக்குனர் ரொட் எரிக்சன், ஊடகவியலாளருக்கு கருத்து தெரிவிக்கையில் இந்த விண்வெளி பயணத்தின் மூலம் விஞ்ஞானத்தின் இரண்டாவது கட்டத்தை எட்டியுள்ளதாக தெரிவித்தார்.

இந்த நிலையில், சாதாரண மக்களும் விண்வெளி பயணத்தினை எதிர்காலத்தில் பாதுகாப்பாக மேற்கொள்ள முடியும் என தெரிவித்துள்ளார்.