இசைஞானி இளையராஜாவுக்கு எம்.பி பதவி !
மாநிலங்களவை உறுப்பினரானார் இளையராஜா
இசைஞானி இளையராஜா மாநிலங்களவை நியமன உறுப்பினராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதனை பிரதமர் மோடி ட்விட்டர் மூலம் தெரிவித்துள்ளார்.
அரை நூற்றாண்டுகளாக தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக பணியாற்றுபவர் இளையராஜா. அவர் பல ஆண்டுகள் தமிழ் திரையுலகின் இசைத்துறையில் அரசாட்சி செய்து வந்தார் என்றால் அது மிகையில்லை. அவர் 1400 படங்களுக்கு மேலாக இசையமைத்துள்ளார்.
அவர் ஐந்து முறை தேசிய விருதுகளை வென்றுள்ளார். 79 வயதாகும் இளையராஜாவை இந்திய அரசு 2010-ம் ஆண்டு பதம் பூஷன் விருது வழங்கி கௌரவித்தது. அதன் பின் 2018-ம் ஆண்டு பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டது.
பிரதமர் மோடி வாழ்த்து
“இளையராஜாவின் படைப்பு மேன்மை தலைமுறைகளைக் கடந்து மக்களை மகிழ்வித்திருக்கிறது என மோடி தெரிவித்துள்ளார். அதே அளவுக்கு அவருடைய வாழ்க்கைப் பயணமும் ஊக்கமளிக்கக்கூடியது. அவர் ஒரு சாதாரண குடும்பத்திலிருந்து வளர்ந்து நிறைய சாதித்துள்ளார். அவர் ராஜ்ய சபாவுக்கு வருவதில் மகிழ்ச்சி.” என பிரதமர் மோடி ட்வீட்டில் தெரிவித்துள்ளார்.
இதேவேளை ஓட்டப்பந்தய வீராங்கனை பி.டி. உஷா மாநிலங்களவை நியமன எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மேலும், திரைக்கதை ஆசிரியர் விஜயேந்திர பிரசாத், சமூக ஆர்வலர் வீரேந்திர ஹெக்டே ஆகியோரும் மாநிலங்களவை உறுப்பினர்களாக நியமனம் செய்ய மத்திய அரசு பரிந்துரை செய்துள்ளது.