நியூஸிலாந்து கிரிக்கெட் அணி, அரையிறுதிக்கான வாய்ப்பினை உறுதிசெய்துள்ளது.

08.11.2021 11:21:16

 

ரி-20 உலகக்கிண்ண தொடரின் 40ஆவது லீக் போட்டியில், நியூஸிலாந்து அணி 8 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது.

இந்த வெற்றியின் மூலம் நியூஸிலாந்து கிரிக்கெட் அணி, அரையிறுதிக்கான வாய்ப்பினை உறுதிசெய்துள்ளது.

அபுதாபியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) குழு 2இல் நடைபெற்ற இப்போட்டியில், நியூஸிலாந்து அணியும் ஆப்கானிஸ்தான் அணியும் பலப்பரீட்சை நடத்தின.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ஆப்கானிஸ்தான் அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில், 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 124 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, நஜிபுல்லா 73 ஓட்டங்களையும் குல்பதீன் 15 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

நியூஸிலாந்து அணியின் பந்துவீச்சில், ட்ரெண்ட் போல்ட் 3 விக்கெட்டுகளையும் சவுத்தீ 2 விக்கெட்டுகளையும் ஆடம் மில்ன், நீஷம் மற்றும் இஷ் சோதி ஆகியோர் தலா 1 விக்கெட்டினை வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 125 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய நியூஸிலாந்து அணி, 18.1 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதனால் நியூஸிலாந்து அணி 8 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, கேன் வில்லியம்சன் ஆட்டமிழக்காது 40 ஓட்டங்களையும் டேவோன் கோன்வே ஆட்டமிழக்காது 32 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

ஆப்கானிஸ்தான் அணியின் பந்துவீச்சில், முஜிப் உர் ரஹ்மான் மற்றும் ரஷித்கான் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக 3 விக்கெட்டுகளை வீழ்த்திய ட்ரெண்ட் போல்ட் தெரிவு செய்யப்பட்டார்.