இலவச செயலி அறிமுகம்

17.08.2021 06:42:15

பூலுவப்பட்டி மாநகராட்சி துவக்கப்பள்ளியில், கணித பாடத்துக்கான இலவச மொபைல் செயலி நேற்று அறிமுகம் செய்யப்பட்டது.திருப்பூர், பி.என்., ரோடு, பூலுவப்பட்டி மாநகராட்சி துவக்கப்பள்ளியில், 870 பேர் பயில்கின்றனர். இந்தாண்டு மட்டும், 373 பேர் சேர்ந்துள்ளனர்.

ஊரடங்கிலும், இணைய வழி வகுப்பில் மாணவர்கள் சிறந்த முறையில் பங்களித்து வருகின்றனர்.வாராந்திர ஒப்படைப்புகளை தொடர்ந்து சமர்ப்பித்து வருகின்றனர். இந்நிலையில் கற்றலில் மேலும் ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் உதவியுடன், 'Ahaguru' எனும் கணிதத்திற்கான இலவச செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.

இச்செயலிக்கு பள்ளிக்கென தனியே, 'பாஸ்கோடு' உருவாக்கப்பட்டுள்ளது. இது மூன்று, நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்பு மாணவ, மாணவியர், 500 பேருக்கு ஓராண்டுக்கு தினசரி கணித வீடியோக்கள், மதிப்பீட்டுத்தாள்கள் ஆகியவற்றை பயன்படுத்தலாம்.அந்தந்த வகுப்புக்கான வீடியோக்கள் மற்றும் பயிற்சித்தாள்கள் ஒவ்வொரு கட்டங்களாக வடிவமைக்கப்பட்டுள்ளது. முடித்தவுடன் அடுத்தடுத்த சுற்றுக்கு செல்லலாம்.

தானே ஒவ்வொரு கணக்காக மாணவர்களே செய்து பார்க்கலாம்.இது குறித்து, ஆசிரியர் மணிகண்டபிரபு கூறியதாவது:ஆன்லைனில் பாடத்தின் வீடியோ, கூகுள் மீட் மற்றும் கூகுள் மூலம் டெஸ்ட் லிங்க் அனுப்புகிறோம். இது மாணவர்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை மேலும் வலுப்படுத்த கணிதத்திற்கென உருவாக்கப்பட்டுள்ள இச்செயலி மூலம் கணித அறிவை மேம்படுத்த உதவும்.

இதுபோன்ற செயலிகள் மாணவர்களை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லும். இப்பள்ளியை படிக்கும் மூன்று முதல் ஐந்தாம் வகுப்பில் உள்ள குழந்தைகளுக்கு இந்த இலவச செயலியை தரவிறக்க உதவி செய்து தரப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.நிகழ்ச்சியில், பள்ளி தலைமையாசிரியை ஆரோக்ய ஜாஸ்மின் மாலா, தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தை சேர்ந்த ராஜேஷ், ஆசிரியர் ரிச்சர்ட் பங்கேற்றனர்.