’ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை’

04.04.2024 07:32:22

மூன்று வருடங்களின் பின்னர் 2024 ஆம் ஆண்டில் 4000 பேருக்கு ஆசிரியர் நியமனம் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. நாட்டின் பொருளாதாரம் மேலும் வலுவடையும் பட்சத்தில், அடுத்த வருடமும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு மேலதிக நிதி ஒதுக்கப்படுமென ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

அலரி மாளிகையில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற மேல் மாகாண பட்டதாரி ஆசிரியர் நியமனம் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

இன்று 2300 ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்கப்படுகிறது. மேலும் 700 நியமனங்கள் வழங்கப்பட உள்ளன. வெற்றிடங்களுக்கு ஏற்ப மேலும் 1000 ஆசிரியர்களை நியமிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கமைய இந்த வருடத்தில் சுமார் 4000 ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர். மூன்று அல்லது நான்கு ஆண்டுகளுக்குப் பின்னரே இந்த நியமனங்களை வழங்க முடிந்துள்ளது. பொருளாதார வீழ்ச்சி மற்றும் கோவிட் தொற்றுநோய் காரணமாக இந்த நியமனங்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டிருந்தன.

நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் மறைப்பெறுமானத்தை எட்டியது. ஆனால் அரசாங்கம் மேற்கொண்ட சரியான பொருளாதார முகாமைத்துவத்தினால் ரூபாயின் பெறுமதி இன்று அதிகரித்துள்ளது. அதன்படி, பொருளாதாரம் வலுப்பெற்றுள்ளது. எனவே, இன்று இந்த நியமனங்களை வழங்குவதற்கான வாய்ப்பு எங்களுக்குக் கிடைத்தது என்றார்.