நீக்கப்பட்டவர்கள் தொடர்பில் நீதிமன்றம் உத்தரவு!

08.04.2024 08:30:22

அமைச்சர் மஹிந்த அமரவீர, லசந்த அழகியவன்ன மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க ஆகியோரை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து நீக்குவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்தை அமுல்படுத்துவதை தடுக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவை எதிர்வரும் 24ஆம் திகதி வரை நீடிக்குமாறு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து நீக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாடுகள் இன்று (திங்கட்கிழமை) எடுத்துக்கொண்ட போதே கொழும்பு மாவட்ட நீதிபதி சந்துன் விதான இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

இந்த முறைப்பாடுகளில் பிரதிவாதிகளாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் சரதி துஷ்மந்த மித்ரபால உள்ளிட்டோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

மேலும் நியாயமான ஒழுக்காற்று விசாரணையின்றி தம்மை கட்சியில் இருந்து நீக்கி கட்சி செயற்குழு எடுத்த தீர்மானம் சட்டத்திற்கு முரணானது எனவும், அதனை செல்லாது என அறிவிக்க வேண்டும் எனவும் கோரி சம்பந்தப்பட்டவர்கள் மாவட்ட நீதிமன்றத்தில் முறைப்பாடு செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.