மாஸ் லுக்கில் சிங்கப்பெண் அதிரடிப்படையினர்!
|
பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், தமிழ்நாடு அரசு சிங்கப்பெண் அதிரடிப்படைப்பிரிவை உருவாக்கியிருக்கிறது. இந்த படைப்பிரிவினருக்கு வித்தியாசமான சீருடையை காவல்துறை வழங்க இருக்கிறது. இந்நிலையில் இதற்கான காரணம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை மிகப்பெரிய அளவில் விவாதங்களை கிளப்பியிருக்கிறது. அதிமுக ஆட்சிக் காலத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை இருந்ததாக திமுகவினர் கூறி வந்தனர். திமுக ஆட்சியில் இதே குற்றச்சாட்டை அதிமுகவினர் வைத்திருந்தனர். |
|
இப்படி இருக்கையில், தற்போது தவெக அரசு பொறுப்பேற்றிருக்கிறது. இருப்பினும் இந்த குற்றச்சாட்டு இன்னும் குறையவே இல்லை. குறிப்பாக பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிராக நடக்கும் குற்றச்சாட்டுகள் தொடர்ந்து அதிகரித்துதான் வருகிறது என்று விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன. சமீபத்தில் கோவையில் சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. எனவே, இதுபோன்ற குற்றங்களை தடுக்க, தமிழ்நாடு அரசு சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்டை என்கிற படையை உருவாக்கியிருக்கிறது. இதில் முழுக்க முழுக்க பெண் காவலர்கள் இடம் பெற்றிருப்பார்கள். பள்ளிகள், கல்லூரிகள், ஐடி பார்க்கள், காவல் நிலையம், ரயில் நிலையம் என முக்கியமான இடங்களில் ரோந்து மற்றும் பாதுகாப்பு பணியில் இருப்பார்கள். பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்களை உடனுக்குடன் தலையிட்டு தடுப்படுதான் இவர்களின் முக்கியமான பணி. இப்படி இருக்கையில், தற்போது இவர்களுக்கு புது சீருடை வழங்கப்பட இருக்கிறது. வெளிநாட்டில் பெண் காவலர்களுக்கு வழங்கப்படும் பிரத்யேக சீருடைய இங்கேயும் வழங்கப்பட இருக்கிறது. வழக்கமாக காவல்துறையில் அனைவருக்கும் ஒரே மாதிரியாக, பிரவுன் நிற சீருடைதான் கொடுக்கப்படும். ஆனால், சிங்கப்பெண்கள் அதிரடிப்படையினருக்கு காக்கி பேண்ட் மற்றும் நீல நிறத்தில் சட்டை என புது சீருடை வழங்கப்பட இருப்பது கவனம் பெற்றிருக்கிறது. கூட்டத்தில் இந்த கவலர்கள் மட்டும் தனித்து தெரியும் வகையிலும், குற்றங்களை கண்காணிக்கவும், குற்றவாளிகளை தகுந்த ஆதாரங்களுடன் கைது செய்யவும் தேவையான கருவிகளை கொண்டிருக்கும் வகையிலும் இந்த சீருடை வடிவமைக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. |