ரூ.50,000 வரை பயிர்க்கடன் தள்ளுபடி முதல்வர் விஜய் உத்தரவு.
கூட்டுறவு வங்கிகளின் மூலம் 2025 மே 1-ம் திகதி முதல் 2026 பிப்ரவரி 28 ம் திகதி வரை பெற்ற ரூ.50,000 வரை பயிர்க்கடன் பெற்ற குறு விவசாயிகளுக்கு முழுமையாக பயிர்க்கடன் தள்ளுபடி செய்து தமிழக முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசு செய்திக் குறிப்பு: தமிழக முதல்வர் விஜய் தலைமையில் இன்று (மே 25) தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், விவசாயிகளுக்கான பயிர்க்கடன் தள்ளுபடி தொடர்பாக, வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் ர. வினோத், கூட்டுறவுத் துறை அமைச்சர் வி.காந்திராஜ், நிதி, திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை அமைச்சர் என்.மரிய வில்சன் மற்றும் துறை அலுவலர்களுடன் ஆய்வு செய்யப்பட்டது.
முழுமையாக இந்திய ரிசர்வ் வங்கியின் 28.11.2025-ஆம் திகதியிட்ட அரசு கடன் தள்ளுபடி திட்டங்களுக்கான மாதிரி செயல்பாட்டு நடைமுறைகளின்படி, பயிர்க்கடன் தள்ளுபடிக்கான முழுத்தொகையையும் அரசானது 45 முதல் 60 நாட்களுக்குள் செலுத்தவேண்டும் என்ற வழிகாட்டுதலின்படியும், தமிழ்நாடு அரசின் இன்றைய நிதிநிலை மற்றும் நிதி ஆதாரங்கள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டும், இந்த இக்கட்டான சூழ்நிலையிலும், கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் 01.05.2025 முதல் 28.02.2026 வரை பெற்ற பயிர்க்கடனை கீழ்க்கண்டவாறு தள்ளுபடி செய்ய முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
கடன் தொகை ரூ.50,000 வரையில் எனும் பட்சத்தில் குறு விவசாயிகளுக்கு கடன் தொகை முழ்வதும் தள்ளுபடி, அதே கடன் தொகைக்கு, சிறு விவசாயிகளுக்கு 50% வரை தள்ளுபடி.
கடன் தொகை ரூ.50,001-ரூ.60,000 வரை எனும் பட்சத்தில் குறு விவசாயிகளுக்கு ரூ.40 ஆயிரம் தள்ளுபடி, அதே கடன் தொகைக்கு, சிறு விவசாயிகளுக்கு ரூ.20 ஆயிரம் தள்ளுபடி.
கடன் தொகை ரூ.60,001-70,000 வரை எனும் பட்சத்தில் குறு விவசாயிகளுக்கு ரூ.30 ஆயிரம் தள்ளுபடி, அதே கடன் தொகைக்கு, சிறு விவசாயிகளுக்கு ரூ.15 ஆயிரம் தள்ளுபடி.
கடன் தொகை ரூ.70,001-80,000 வரை எனும் பட்சத்தில் குறு விவசாயிகளுக்கு ரூ.20 ஆயிரம் தள்ளுபடி, அதே கடன் தொகைக்கு, சிறு விவசாயிகளுக்கு ரூ.10 ஆயிரம் தள்ளுபடி.
கடன் தொகை ரூ.80,001-90,000 வரை எனும் பட்சத்தில் குறு விவசாயிகளுக்கு ரூ.10 ஆயிரம் தள்ளுபடி, அதே கடன் தொகைக்கு, சிறு விவசாயிகளுக்கு ரூ.5 ஆயிரம் தள்ளுபடி.
கடன் தொகை ரூ.90,001-1,00,000 வரை எனும் பட்சத்தில் குறு விவசாயிகளுக்கு ரூ.10 ஆயிரம் தள்ளுபடி, அதே கடன் தொகைக்கு, சிறு விவசாயிகளுக்கு ரூ.5 ஆயிரம் தள்ளுபடி.
கடன் தொகை ரூ.1 லட்சத்துக்கும் மேல் எனும் பட்சத்தில், குறு விவசாயிகளுக்கு ரூ.5 ஆயிரம் தள்ளுபடி, அதே தொகுக்கு சிறு விவசாயிகளுக்கும் ரூ.5 ஆயிரம் தள்ளுபடி.
மேலும், கூட்டுறவு வங்கிகள் மூலம் பயிர்க்கடன் பெற்ற இதர பெரு விவசாயிகளுக்கு தலா ரூ.5,000/- பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும்.
இந்தப் பயிர்க்கடன் தள்ளுபடி, எதிர்வரும் சாகுபடி பருவத்திற்கு கடன் பெற விரும்பும் விவசாயிகளுக்கு பெருமளவில் பயன்தரும்.
இந்தப் பயிர்க்கடன் தள்ளுபடித் திட்டத்தின் கீழ் 01.05.2025 முதல் 28.02.2026 வரை கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் பெற்றுள்ள 14.22,555 விவசாயிகள் பயனடைவார்கள். இதனால் அரசுக்கு ரூ.2,044.46 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.