கைவிடப்பட்டது சேவை முடக்கல் போராட்டம்!

30.06.2025 08:09:41

வடக்கு மாகாண தனியார் போக்குவரத்து சேவை சங்கத்தினர் நாளை (01) செவ்வாய்க்கிழமை முன்னெடுக்கவிருந்த சேவை முடக்கல் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் சிவபரன் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண சாலைகளில் நடைபெறும் சட்டவிரோத அத்துமீறிய செயற்பாடுகளை நிறுத்துவதற்கு இ.போ.ச துறைசார் தரப்பினர் உறுதி வழங்கியதன் அடிப்படையில் இந்த போராட்டம் கைவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது குறித்து அவர் மேலும் தெவிக்கையில், ”இலங்கை போக்குவரத்து சபையின் வடக்கு மாகாண சாலைகளில் நடைபெறும் சட்டவிரோத செயற்பாடுகளை கண்டித்தும், அவ்வாறான செயற்பாடுகளை நிறுத்தி தனியார் பேருந்துகளின் பாதுகாப்பான சேவையை உறுதி செய்வதற்காகவும் நாளையதினம்  வடக்கில் சேவை முடக்கல் போராட்டம் இடம்பெறும் என கடந்தவாரம் அறிவிக்கப்பட்டிருந்தது.

 

 

 

கைவிடப்படும் போராட்டம் 

 

இனிவரும் காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாதென்று இ.போ.சபை, வடக்கு ஆளுநர் மற்றும் துறைசார் தரப்பினர் தற்போது வழங்கிய உத்தரவாதத்துக்கு அமைய குறித்த போராடம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் இலங்கை போக்குவரத்து சபையின் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் இடம்பெற்ற கால அட்டவணைக்கு முரணான சேவை ஒன்றால் ஏற்பட்ட முரண்பாட்டை அடுத்து யாழ் மத்திய பேருந்து நிலையத்தில் தனியார் மற்றும் இ.போ.ச தரப்பினரிடையே குழப்ப நிலை  ஏற்பட்டிருந்தது. இதையடுத்து காவல்துறையினர் வரவழைக்கப்பட்டு நிலைமை சுமுகமாக்கப்பட்டது.

ஆனாலும் இச்சட்டவிரோதம் குறித்து துறைசார் தரப்பினருக்கும் போக்குவரத்து அதிகார சபை, துறைசார் அமைச்சு, வடக்கின் ஆளுநர் ஆகியோரிடம் முறையிட்டிருந்ததுடன், காவல் நிலையத்திலும் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டது.

 

 

 

இலங்கை போக்குவரத்து சபை உறுதி

ஆனாலும் எந்தவொரு தீர்வுக் கிடைக்காமல் போராட்டம் முன்னெடுக்கப்பட இருந்த நிலையில் ஆளுநர், இ.போ.சபை, காவல்துறையினர் இவ்விடயம் தொடர்பில் முன்னெடுத்த நடவடிக்கை காரணமாக இ.போ.ச சட்டவிரோத சேவையை இடைநிறுத்தியுள்ளது.

அத்துடன் இணைந்த சேவை தொடர்பிலும் வரவுள்ள நாட்களில் இரு தரப்பினருடனும் கலந்து பேசி தீர்வை காண முயற்சிப்பதாகவும் எமக்கு உறுதி தந்துள்ளனர்.

இவ்வாறான நிலையில் மக்களின் இயல்பு நிலையை சீர் குலைப்பதை தவிர்க்கும் வகையில் சேவை முடக்கல் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.