அரசாங்கத்தின் மிகப்பெரிய அடையாள அழிப்பு

03.01.2023 13:12:34

இலங்கை அரசு வாகன இலக்கத் தகட்டில் உள்ள மாகாண அடையாளங்களை குறிக்கும் ஆங்கில எழுத்துக்களை அகற்றுவதாக அறிவித்துள்ளது.

ஏற்கனவே இலங்கையில் உள்ள மாகாண சபை முறையை ஒழிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் செயற்பட்டு வரும் அரசு தற்போது அதற்கு தடையாக இருக்கும் நிர்வாக ரீதியான அதிகாரங்களை அகற்றி வருகிறது. 

தமிழ் மக்களுக்கான குறைந்த பட்ச அரசியல் தீர்வாக 1987 ஆம் ஆண்டு இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின் ஊடாக உருவாக்கப்பட்ட 13 ஆவது திருத்தச் சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட இந்த மாகாண சபை அதிகாரங்களை இலங்கை அரசு நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தியது.

மாகாண சபை அதிகாரங்கள்

வடகிழக்கு மக்களுக்கான அரசியல் தீர்வாக கொண்டுவரப்பட்ட இந்த மாகாண சபை அதிகாரங்களை நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தியதன் நோக்கமே குறித்த மாகாண சபை அதிகாரங்களை முழுமையாக நடைமுறைப்படுத்தாது அதன் அதிகாரங்களை மத்திய அரசின் காட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்காகவே.

அத்துடன் தென்னிலங்கையில் உள்ள அரசியல் கட்சிகள் தங்களது அரசியல் கட்டமைப்புகளை மாகாண அடிப்படையில் பலப்படுத்தி நாடாளுமன்ற தேர்தலுக்கான ஒத்திகை பார்க்கும் இடமாகவே இந்த மாகாண சபைகளை மாறி மாறி ஆட்சிக்கு வந்த அரசுகள் பயன்படுத்தி வந்தனர்.

ஏற்கனவே மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்ட  காவல்துறை அதிகாரம், காணி அதிகாரங்களை வழங்காது இழுத்தடித்த இலங்கை அரசு கடந்த காலங்களில் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்ட மாகாண கல்வி திணைக்களத்திற்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை கூட பறிமுதல் செய்து வருகிறது.

அதாவது மாகாண பாடசாலைகளை அபிவிருத்தி என்ற போர்வையில் தேசிய பாடசாலைகளாக மாற்றி மாகாண சபையின் அதிகாரத்தின் கீழ் இருந்த பல பாடசாலைகளை மத்திய அரசின் காட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளனர்.

இதேபோல் மாகாண அதிகாரிகளின் நிர்வாகத்தின் கீழ் இருந்த ஒரு சில காணி அதிகாரங்களை கூட மத்திய அரசு மகாவலி அபிவிருத்தித் திட்டம், வனவளப் பாதுகாப்பு, தொல்லியல் ஆய்வுகள் என்ற போர்வையில் மத்திய அரசின் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வடகிழக்கில் உள்ள பல ஏக்கர் காணிகளை கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளது.

தற்போது மாகாண சபை அதிகாரத்தின் கீழ் ஆக குறைந்த அதிகாரம் செலுத்த கூடிய துறையாக இருப்பது மாகாண பாடசாலைகள் மட்டுமே அதுவும் நிதிப் பற்றாக்குறை, வளப் பற்றாக்குறை, மத்திய, மாகாண அரசியல் தலைவர்களின் அரசியல் தலையீடு போன்ற காரணங்களால் அந்த அதிகாரங்களையும் முழுமையாக நடைமுறைப் படுத்த முடியவில்லை.

வாகன இலக்கத் தகடு மாற்றம்

இதன் தொடர்ச்சியாக தற்போது இலங்கையின் மோட்டார் திணைக்களத்தின் ஊடாக இத்தனை ஆண்டுகாலம் நடைமுறையில் இருந்த வாகன இலக்க தகடுகளில் பொறிக்கப்படும் மாகாண அடையாளங்களை காட்டும் ஆங்கில எழுத்துக்களை அகற்ற தொடங்கி உள்ளனர்.

இதற்கு அரசு பொருளாதார நெருக்கடி, மாகாணத்திற்கு மாகாணம் வாகனங்களை கொள்வனவு செய்யும் வாடிக்கையாளரின் நலன் கருதி இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக கூறுகிறது.

இலங்கையில் உள்ள ஒரு தேசிய இனம் தனது அடையாளத்தை, நிலத்தை, வளத்தை, உரிமையை இழந்துவிட்டு அதற்காக 70 வது ஆண்டுகளுக்கு மேலாக போராடிவரும் நிலையில், அவர்களுக்காக உருவாக்கப்பட்ட அற்ப சொற்ப நிர்வாக அதிகாரங்கள், அடையாளங்களை இலங்கை அரசு அழிப்பதை வடகிழக்கு மக்கள் அனுமதிக் கூடாது.

அதிகாரங்களை தக்கவைக்க முடியாமல் சண்டை போடும் தமிழினம்

பட்டு வேட்டிக்காக போராடும் எம்மிடம் இருந்த கோமனத்தையும் உருவி எடுப்பதை அறியாது தமிழ் மக்கள் செயற்பட்டு வருகின்றனர்.

தனித் தமிழீழம், சமஷ்டி தீர்வு என தமிழ் மக்கள் தங்களுக்கான உச்சபட்ச அரசியல் தீர்வைக் கேட்டு போராடிவரும் நாம், ஏற்கனவே எமக்காக வழங்கப்பட்ட அதிகாரங்களை கூட தக்கவைக்க முடியாமல் எமக்குள்ளே சண்டை போட்டுக் கொண்டு இருக்கிறோம்.

இலங்கையின் மாகாண சபை அதிகாரிகள் வடகிழக்கு தமிழர்களுக்காக உருவாக்கப்பட்டது. வடகிழக்கு தமிழர்களின் போராட்டத்தின் ஊடாக கிடைத்த ஒரு அரசியல் அதிகாரம். எனவே தமிழ் மக்களுக்கான உச்சபட்ச அரசியல் அதிகாரம் கிடைக்கும் வரை மாகாண சபை அதிகாரங்களை அதன் ஊடாக எமக்கு கிடைத்த அடையாளங்களை தமிழ் மக்கள் தக்கவைத்துக் கொள்ள வேண்டும்.

உண்மையில் இலங்கையில் வடகிழக்கு தவிர்ந்த ஏனைய பிரதேசங்களுக்கு மாகாண சபை முறைமை தேவையற்ற ஒன்று. அவர்களுக்கு மத்திய அரசின் நிர்வாகம் இருப்பதனால் வடகிழக்கு தவிர்ந்த ஏனைய மாகாண சபை நிர்வாகங்களை மத்திய அரசு வேண்டுமானால் அகற்றி கொள்ளட்டும்.

இலங்கையில் மாகாண சபைகளுக்கு அதிகப்படியான நிதி செலவிடப்படுவதாக கூறும் மத்திய அரசு அதனை நிவர்த்தி செய்து கொள்ளட்டும். ஆனால் வடகிழக்கு மாகாண சபைகளை மத்திய அரசு அகற்ற கூடாது.

தமிழர்கள் விழித்தெழ வேண்டிய தருணம்

இது மத்திய அரசுக்கு எதிராக 70 ஆண்டுகளுக்கு மேலாக போராடி வரும் தமிழ் தேசிய இனம் தனது அரசியல் ரீதியான நிர்வாகத்தை முன்னெடுப்பதற்காக இந்தியா - இலங்கை என்ற இரண்டு நாடுகளின் ஒப்பந்தம் ஊடாக வழங்கப்பட்ட ஒன்று.

இந்த அதிகாரத்தின் ஊடாக ஒரு ஆணியை கூட புடுங்க முடியவில்லை, கொடுத்த அதிகாரத்தை முழுமையாக நடைமுறைப் படுத்தவில்லை, இந்த மாகாண சபை அதிகாரிகள் தமிழர்களுக்கு போதுமானதாக இல்லை இவ்வாறு பல விமர்சகர்கள் தமிழ் மக்கள் மத்தியில் உண்டு.

மாகாண சபை அதிகாரங்களை தமிழர்களின் அரசியல் தீர்வின் முடிந்த முடிவாக ஏற்கமுடியாது என தமிழர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

ஆனால் அதற்காக தமிழ் மக்களுக்கு அரசியல் யாப்பு சட்டத்தின் ஊடாக வழங்கப்பட்ட மாகாண சபை அதிகாரங்களை இல்லாதொழிக்கவோ , அதன் ஊடாக தமிழர்களுக்கு வழங்கப்பட்ட நிர்வாக ரீதியான அடையாளங்களை அழிக்கவோ நாம் அனுமதிக்க முடியாது.

தமிழர்களின் பூர்வீக தாயகம் மற்றும் அது சார்ந்த நிர்வாக அடையாளங்களுக்கு சட்ட ரீதியான அங்கிகாரம் வழங்கப்பட்டுள்ள ஒரு அதிகார சபையாக இந்த மாகாண சபை மட்டுமே உள்ளன.

அது வெறும் எழுத்தில் மட்டுமே இருக்கிறது என்று வைத்துக் கொண்டாலும் தமிழர்களின் உரிமைப் போராட்டத்திற்கு கிடைத்த முதலாவது வெற்றியும் அந்த வெற்றியின் ஊடாக கிடைத்த முதலாவது அரசியல் அதிகாரமும் இந்த வடகிழக்கு மாகாணசபை தான்.

எனவே தமிழர்களுக்கான உச்சபட்ச அரசியல் தீர்வு கிடைக்கும் வரை இந்த மாகாண சபை அதிகாரங்களை தக்கவைத்துக் கொள்ள வேண்டியது தமிழர்களின் கடமையாகும்.

இலங்கையில் வாகன தகட்டில் உள்ள கிழக்கு மாகாண, வடக்கு மாகாண ஆங்கில குறியீடுகள் நீக்கப்படக் கூடாது. அது வடகிழக்கு மக்களின் நிர்வாக ரீதியான அடையாளம். எமது அடையாளங்களை ஏற்கனவே ஒவ்வொன்றாக இழந்து வரும் தமிழர்களுக்கு இது அரசாங்கம் சட்ட ரீதியாக செய்த மிகப்பெரிய அடையாள அழிப்பாகவே பார்க்கப்படுகிறது.